மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஜூன் 24-ல் சாலையோர உணவு வணிகர்களுக்கு பயிற்சி முகாம்!

Spread the love

சாலையோர உணவு வணிகர்களுக்கு அடிப்படை உணவு பாதுகாப்பு பற்றிய பயிற்சி, FSSAI பதிவுச் சான்று விண்ணப்பம் உள்ளிட்டவை குறித்த ஒருங்கிணைந்த முகாம் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌.

சாலையோரங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு என்றே பெரும் வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அதேசமயம், இது போன்ற உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளும் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

சாலையோர உணவு வணிகர்களும் FSSAI விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் பல கடைகளில் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை என்றும் சுகாதாரமற்ற நீர் வினியோகம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் பல புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஆயிரக்கணக்கான சாலையோர உணவு வணிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சாலையோர உணவு வணிகர்கள், FSSAI பதிவுச் சான்று விண்ணப்பிக்க உதவும் வகையிலும், அவர்களுக்கு அடிப்படை உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கவும், மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஒருங்கிணைந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 24-ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த ஒருங்கிணைந்த முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் நகல் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் 9486654917 / 6369902410 ஆகிய தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது.