கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சுவாமி சித்பாவனந்தா தனியார் பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை பூப்படைந்ததால் வகுப்பறை வாசலில் அமர வைத்து பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை உத்தவிரன் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் நெகமம் காவல் நிலையத்தில் பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகிய மூன்று பேரும் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் புகார் அளித்ததால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுரேந்திரநாத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை கூறும் போது:
இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அந்த மூவரும் கைது செய்யப்படவில்லை. தினமும் வேலைக்குச் சென்று வரும் போது அச்சத்துடன் சென்று வருகிறோம். மேலும் நாங்கள் இருவரும் வேலைச் செல்வதால் மகளை தனியாக விட்டுச் செல்லவும் அச்சமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய வேண்டும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் என கூறினார்.
Leave a Reply