மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அடிவாரப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு முருகனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். வழக்கம்போல் அதிகாலை இறைவனை தரிசிக்க பக்தர்கள் மலை ஏறிக் கொண்டிருந்த வேளையில், யானை ஒன்று மலைப்பாதையில் குறுக்கே வந்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அந்தப் பகுதியில் இருந்து விலகிச் சென்றனர். சிலர் தங்கள் மொபைல் தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டனர். யானை, அப்பகுதியில் உள்ள “மயில் மண்டபம்” வரை வந்து சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து உடனடியாக தகவலறிந்த வனத்துறையினர், இரண்டு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு, யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, யானை வனத்துக்கு சென்றது. அதனால் யாருக்கும் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மருதமலை ஒரு வனப்பகுதி அருகிலுள்ள பகுதியாக இருப்பதால், வனவிலங்குகள் சில சமயங்களில் அருகிலுள்ள பகுதிகளுக்கு வருவது வழக்கமானது. குறிப்பாக உணவுத் தேடலுக்காக யானைகள் சில சமயம் கோவில் பகுதி வரை வருகின்றன. பக்தர்கள் அதிகாலை நேரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் வனத்துறையின் அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்தனர்.
இச்சம்பவம் பின்னணியில், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் வனப்பாதுகாப்பு பணியாளர்கள் மருதமலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவில் நிர்வாகமும் வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Leave a Reply