,

​மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு – பக்தர்கள் அதிர்ச்சி

marudhamalai temple
Spread the love
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப் பெருமானின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில், முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மூலவருக்கு முன்பாக இருந்த சுமார் 2.5 அடி உயரம் கொண்ட, ₹4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல், புதன்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் திருடப்பட்டுள்ளது.

சாமியார் வேடத்தில் வந்த ஒரு நபர் வெள்ளி வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும், பட்டப்பகலில் இந்த திருட்டு நடந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர், சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருதமலையில் நடந்த இந்த திருட்டு சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.