மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர் மாநாட்டை ஒட்டி, நகரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு, பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படுகிறது.
மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதிலுமிருந்து மட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்தும் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
மாநாட்டுக்காக, முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவமைப்பில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையில் நிற்கின்றனர். மாநாட்டை முன்னிட்டு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரும் இந்த மாதிரி கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் ஒரே நேரத்தில் ‘கந்த சஷ்டி கவசம்’ பாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டை ஒட்டி, சுமார் 10,000 வாகனங்கள் மதுரைக்கு வருவதாக கணிக்கப்படுகிறது. இதற்காக வாகன நிறுத்தும் வசதிகள், குடிநீர், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோரின் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் இடையூறும் இல்லாமல் நகரத்தில் இயல்பு போக்குவரத்து நடைபெற, சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply