,

மகிமைகள் புரிந்த மானூர் சுவாமிகள்

manoor swamigal
Spread the love

பழநியில் வாழ்ந்த மகான்களுள் ஒருவர் மானூர் சுவாமிகள். இவரது பெயர், பிறப்பு மற்றும் பெற்றோர் பற்றி விவரங்கள் தெரியப்படவில்லை.இவர் பழநிக்கு வட திசையில் உள்ள மானூர் எனும் கிராமத்தில் சில காலம் தங்கி இருந்ததால் இவருக்கு மானூர் சுவாமிகள் என்ற பெயரே நிலைத்துப் போனது. இவர் மகா சமாதி ஆன தினம் மட்டும் பலராலும் இன்றைக்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குரு பூஜைகள் நடந்து வருகின்றன. இவருடைய பக்தர்கள் திரளாக வந்து பூஜையில் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தி ஆராதித்து வருகின்றனர்.
எளிமையான தோற்றம். வேட்டி சட்டை துண்டு என எந்த ஆடையையும் இவர் அணியமாட்டார். சட்டென்று பார்ப்பவர்களுக்கு இவர் நிர்வாண சாது என்பது தெரியாது. ஒரு போர்வையை உடல் மேல் சுற்றி கழுத்து வரை போர்த்தி இருப்பார். அதிகம் பேச மாட்டார்.
பழநி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இவர் எங்கு சென்றாலும் இவரைப் பின்தொடர்ந்து பக்தர்களும் உடன் செல்வர். எவரையேனும் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்துவிட்டால் அவரை அருகே அழைத்து தனக்குப் பிடித்ததை அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி வரச் சொல்லுவார். கடவுளே நேரில் வந்து தனக்கு இட்ட கட்டளை என்பதுபோல் சுவாமிகள் சொன்ன அந்த நிமிடமே சம்பந்தப்பட்டவர் கடைக்கு ஓடுவார். சுவாமிகள் தன் கைப்பட சாப்பிட்டு எவரும் பார்த்தது இல்லை. எவரேனும் ஊட்டிவிட்டால் ஓரிரு கவளங்கள் சாப்பிடுவார். இந்த பாக்கியத்தை சுவாமிகளுக்கு மிகவும் பிரியமான பக்தர்கள் பெற்றிருந்தனர்
இஸ்லாமிய அன்பர் ஒருவர் சுவாமிகளின் தீவிர பக்தர். இவர் புனிதத் தலமான மெக்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தார். அங்கே தன்னுடைய நண்பர் ஒருவரிடம் மானூர் சுவாமிகளது மகிமையை உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்தார். அந்த நண்பரும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் பேசிக்கொண்டிருந்த மெக்கா சமாதியின் வழியே நடந்து சென்றார் சுவாமிகள். அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இஸ்லாமிய அன்பர் உடனே தன் நண்பரிடம், அதோ அதோ பார் அவர்தான் மானூர் சுவாமிகள். இப்போதுதான் இவரைப் பற்றி உன்னிடம் சொல்லி வந்தேன். சுவாமிகள் குறித்து உணர்வுபூர்வமாக யார் பேசினாலும் அங்கே அப்போதே வந்து தரிசனம் தருவார் சுவாமிகள் என்று ஆச்சரியம் பொங்க கூறினார். மறு விநாடி அங்கே சுவாமிகளைக் காணோம்.