பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு – அரசியல் கட்சிகள் உரிமை கோர்வது அர்த்தமற்றது: திருமாவளவன்

tholthirumavalavan
Spread the love

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அரசியல் களத்திலும் விவாதங்களை தூண்டியுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த வழக்கில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உரிமை கோர்வது பொருத்தமற்றது எனத் தெரிவித்தார்.

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவைக்கு வந்திருந்த அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கிய கொடூரம். இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய முழுவதும் இனி இதுபோன்ற வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது. நீதிபதி நந்தினி தேவி அளித்த தீர்ப்புக்கு எனது பாராட்டுகள்,” என கூறினார்.

“இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு இருக்குமோ என மக்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உறுதியாக வாதாடி, நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். அவர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த வழக்கில் அரசியல் கட்சிகள் யாரும் இது தங்களுடைய வெற்றி என உரிமை கோருவதற்கு இடமில்லை. முக்கிய ஆதாரங்களாக கைப்பற்றப்பட்ட செல்போன் தகவல்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் ஆனது,” என்றார்.

அதே நேரத்தில், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “இது போன்ற இணையதளங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும், கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி நடக்கும் நிலையைவும் அவர் கண்டித்தார். “நானும் ஒரு காலத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோது இந்த வகை அழைப்புகளை சந்தித்துள்ளேன். யோகா பயிற்சி எனும் பெயரில் மதவாத கருத்துகளை பள்ளி மாணவர்களிடையே ஊட்டுகிறார்கள். இது ஆபத்தானது. அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து, கல்வி துறையை மதவாத அரசியலிடமிருந்து காக்க வேண்டும்,” என திருமாவளவன் கடுமையாக குற்றம்சாட்டினார்.