பேரூர் ஆதீனத்தில் தொடங்கிய “ஒரு கிராமம், ஒரு அரச மரம்” – தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு

Spread the love

பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் “ஒரு கிராமம், ஒரு அரச மரம்” எனும் மாபெரும் திட்டம் இன்று (20/03/25) சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முத்தமிழ் அரங்க வளாகத்தில், முதல் அரச மரக்கன்றை நட்டு தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், 2004-ஆம் ஆண்டு ‘பசுமை கரங்கள்’ இயக்கத்தை தொடங்கியபோது, ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வளர்த்தால் மக்களின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சத்குரு கூறியதாக நினைவு கூரினார். பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் மற்றும் சத்குருவிற்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததால், அவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தற்போதைய 25-ஆவது ஆதீனம் அவர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இந்த “ஒரு கிராமம், ஒரு அரச மரம்” திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

முன்பு, 10-20 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பேரிடர்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன. ஒரே நாளில் அதிக மழை பொழிந்து பெருவெள்ளம் ஏற்படுவதோடு, மழை பெய்யாமல் வறட்சி உருவாகும் நிலையும் காணப்படுகிறது. புவி வெப்பமயமாதலால் உருவாகும் இவ்விதமான சிக்கல்களுக்கு மரங்கள் தீர்வாக அமையும்.

அரச மரங்கள், 8 முதல் 10 மனிதர்களுக்கான ஆக்ஸிஜனை வழங்கக்கூடியவை. ஆனால் பல இடங்களில் அவை அழிக்கபட்டுவிட்டன. இதை மீட்டுருவாக்க தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரங்கள் நட வேண்டும் என்று பேரூர் ஆதீனத்திடம் கேட்டபோது, அவர்கள் முழுமையான ஆதரவை வழங்கினார்கள். மேலும், இந்த திட்டத்தை தமிழகமெங்கும் செயல்படுத்த வேண்டும் என உறுதிபடுத்தினார்கள்.

திட்டத்தின் முதற்கட்டமாக, கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பின்னர் பேரூர் ஆதீனம் பேசியதாவது, “அரச மரங்கள் அதிக ஆக்ஸிஜன் வழங்குவதோடு, மகப்பேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றன. ஆனால் அவை பல இடங்களில் வெட்டப்பட்டு அழிக்கபட்டுள்ளன.

இதை மாற்ற, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு அரச மரம் வளர வேண்டும். இதற்காக வட்டம், மாவட்டம், மற்றும் வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நம் சமயம், பண்பாடு, சுற்றுச்சூழல், உடல் நலம் ஆகிய அனைத்தும் பாதுகாக்கப்பட்டு, இது மரம் நடும் நிகழ்வாக மட்டும் இல்லாமல் ஒரு மறுமலர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

முன்பு அரச மரங்கள் கல்விக்கூடங்களாக, வழிபாட்டு இடமாக, நீதிமன்றங்களாகவும் பயன்பட்டன. இத்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நடுவதோடு, அவற்றை பராமரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்” என்றார்.

சிரவை ஆதீனம் அருளுரை வழங்கும் போது, *”மக்கள் தொகைக்கு ஏற்ப இயற்கை வளங்கள் சமநிலையாக இருக்க வேண்டும். அதற்காக மரங்களை பாதுகாக்க இது முக்கியமான திட்டமாக அமையும். இத்திட்டம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

பின்னர் சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன்,*”இந்த திட்டத்திற்குத் தேவையான அனைத்து மரக்கன்றுகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் படவா கோபிஉழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து,நொய்யல் ஆறு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.