, ,

பேரூர் அடிகளார் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு துவக்கம்

perur adigalar hospital
Spread the love

சேவை நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ள பேரூராதினம் சீர்வளர்ச்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பேரூர் அடிகளார் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு நாளை துவக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறும்போது, “திருக்கயிலாயப் பரம்பரை மெய் கண்ட சந்தானம் பேரூர் ஆதினம் 24-ம் குரு மகா சன்னிதானங்கள் தெய்வப் பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு சலுகை முறையிலும், ஒரு பகுதி இலவசமாகவும் சிகிச்சை அளிக்கும் பல்நோக்கு மருத்துவ உதவி மற்றும் நோய் தடுப்பு வசதிகளை அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கினை எப்போதும் கொண்டிருந்தார்கள்.500 ஆண்டுகளுக்கு முன்பு சத்வித்ய சன்மார்க்க சங்கம் சார்பில் பல்வேறு நலப்பணிகள் துவங்கப்பட்டு பல்வேறு இலக்கியப் பணிகள், தமிழ் மொழி வளர்ப்புப் பணிகள் போன்ற நற்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்விப் பணிகள் தொடங்கப்பட்டன. 1951 முதன் முதலில் உயர் தொடக்கப் பள்ளியும், அதைத்தொடர்ந்து 1953 – ல் தமிழ்க் கல்லூரியும் தொடங்கப்பட்டது. இன்று சுமார் 2000 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களின் கிராமங்களை தத்தெடுத்து பல சேவைகளை அளித்து வருகின்றோம். தற்போது கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அன்னூர் வட்டம் முதலிபாளையம் கிராமத்தில் சேவை நோக்குடன் இந்த மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.

பேரூராதீனம் சீர்வளர்ச்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (பேரூரடிகளார் மருத்துவமனை) 01.03.2024 அன்று வெளி நோயாளிகள் பிரிவுடன் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை 20.03.2024 முதல் உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட உள்ளது. இம்மமருத்துவமனை நான்கு தளங்களைக் கொண்ட 115 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 படுக்கை வசதிகளோடு தரைத்தளமும், முதல் தளமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்து அறநிலைத்துறை உயர்மட்ட குழு உறுப்பினராவுள்ள தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் இயங்கும் மருத்துவமனையில், தற்போது பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், முகச்சீரமைப்பு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், 24 மணி நேரமும் செயல்படும் அவசரச் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, குறைந்த கட்டணத்தில் ஆய்வுக்கூடம், 10 சதம் சலுகை கட்டணத்தில் மருந்தகம், பல்வேறு அறுவைச் சிகிச்சை அரங்குகள் ஆகியன செயல்பட்டு கொண்டுள்ளன. 17.03.2024 அன்று மருத்துவமனையின் முதல் இலவச மருத்துவ முகாம் கோவை, குப்பேபாளையத்தில் நடத்தப்பட்டது. மாதந்தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெறும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவம் இம்மருத்துவமனையில் கிடைக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ மற்றும் அனைத்து வசதிகளோடு மருத்துவமனைக்கென தனியாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதியில் வாழும் மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும். இங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றுகின்றார்கள். மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இம் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. மிக விரைவில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பல வசதிகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் அவர்களின் சமூக சேவை பொறுப்புணர்வு நிதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளன” என்று அடிகளார் கூறினார்.

பேட்டியின் போது மருத்துவமனையின் தலைமை செயற்பாட்டு அலுவலரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான, முனைவர் சி. சுப்பிரமணியம் உடன் இருந்தார்.