,

பேரூராட்சியாக மாறும் அரசூர், நீலம்பூர், சின்னியம்பாளையம் ஊராட்சிகள்

Spread the love
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உட்பட்ட 23 ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர், நீலம்பூர், சின்னியம்பாளையம், கணியூர், மாதப்பூர், பட்டணம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாளையம், பொள்ளாச்சி தெற்கு, மாங்கினாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், முத்து கவுண்டர் புதூர், ஆட்சி பட்டி, மலுமிச்சம்பட்டி, அசோகபுரம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், குருடம்பாளையம், ஜடையம்பாளையம், சிக்கரசம்பாளையம், தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், பன்னிமடை மருதநாயக்கன்பாளையம் ஆகிய 23 ஊராட்சிகளை கடந்த 2023 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 23 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகளை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வைஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு கூறுகையில், “கோவையில் குறிப்பாக கோவை மாநகர ஒட்டிய நீலம்பூர், சின்னியம்பாளையம், அரசூர், கணியூர், முத்து கவுண்டர் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது தொழில் நகரமாக மாறி வருவதால் புதிய தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள் என அதிக வருவாய் ஈட்டு தரும் வகையில் இந்த ஊராட்சி பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என்று கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு மூலம் தமிழக அரசுக்கும் நகராட்சி நிர்வாக செயலாளருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

மேலும் அரசூர் ஊராட்சி தற்போது மிக வேகமாக தொழில் நகரமாக மாறி வருவதால் அடிப்படை வசதிகளான தார் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், வசதி ஆகியவை கருத்தில் கொண்டும், அதிக வருவாய் தரும் ஊராட்சிகளாக இருப்பதால் இவைகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் புதிய தொழிற்சாலை உருவாக்குதல், போக்குவரத்து வசதி, மின்சார வசதி ஆகியவை அமைக்கும் வகையில் பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதால் புதிய தொழிற்சாலைகள் வளரும். அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால்  கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ்  அமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம். ” என்று  அவர் தெரிவித்தார்