கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பினை புஸ்ஸி ஆனந்திடமே ஒப்படைத்துவிட்டதால், அவர் சொல்லுவதைத்தான் வேத வாக்காக கேட்கிறார் விஜய். இதனால் கட்சியில் நடக்கும் நல்லது கெட்டது எதுவும் விஜய்க்கு தெரியவே இல்லை. இது எதில் போய் முடியுமோ? என்கிற ரீதியில் புலம்பியிருந்த தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ அண்மையில் வெளியாகி தவெகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருந்தது.
மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை பேரம் பேசுகிறார்கள் என்று ஈசிஆர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளின் மீது குற்றச்சாட்டும் அண்மையில் எழுந்தது.விஜய் மக்களை சந்திக்க ஏன் மறுக்கிறார்? பத்திரிகையாளர்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? வீட்டிற்குள்ளேயே ஏன் முடங்கி கிடக்கிறார்? என்று பல கேள்விகள் எழும் நிலையில், தங்களையே தலைவர் விஜய் சந்திப்பது இல்லை என்று புலம்புகின்றனர் தவெக நிர்வாகிகள்.
உச்ச நடிகரின் கட்சி என்பதால் தவெகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவெகவில் இணைந்து காரியம் சாதித்துக்கொள்ள பல மாற்று கட்சியினர் முயன்று வருகின்றனர். மாற்றுக்கட்சியில் இருந்த வருவோரை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டியது வரும். விஜய் மன்றத்தில் இருப்பவர்களுக்கே பொறுப்புகள் வழங்க முடியாத சூழல் இருப்பதாவ், மாற்றுக்கட்சியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளுமை மிக்கவர்கள் வந்தாலும் அவர்கள் குறித்த விபரத்தை விஜய்யிடம் தெரிவிக்காமல் இருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த்.
விஜய் மன்றத்தில் இருந்தவர்கள் அனைவருமே அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். மூத்த அரசியல்வாதிகளை கட்சியில் இணைத்துக்கொண்டால் அது கட்சிக்கு பலத்தைக் கொடுக்கும் என்று ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் நினைத்தாலும் அது நடக்க விடாமல் செய்கிறாராம் புஸ்ஸி. இதற்கிடையே முக்கிய கட்சியின் பெண் பிரபலம் ஒருவர் புஸ்ஸி ஆனந்த் வழியாக விஜய்யை சந்திக்க முயன்றுள்ளார். அது, நிறைவேறவில்லை. இதனால், தானாகவே நேரடியாக சென்று விஜய்யை சந்தித்து பேசிவிட்டாராம்.
தன்னை மீறி தலைவரை சந்தித்து விட்டார் என்பதற்காக ஆத்திரப்பட்டு அந்த பெண் பிரமுகர் விஜய்யை சந்தித்து சென்ற விபரத்தை அந்த பெண் பிரமுகரின் கட்சி தலைவருக்கு புஸ்ஸி ஆனந்த் கசிய விட்டதாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்த அந்த கட்சி தலைவர் பெண் பிரமுகரை அழைத்து கண்டித்திருக்கிறார். இதற்கு மேலும் இருந்தால் கட்சியில் மரியாதை கிடைக்காது என்று கருதிய அந்த பெண் பிரமுகர், அதிமுகவில் சேர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.



Leave a Reply