ஆ.வெ.மாணிக்கவாசகம்
18 – வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 380 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது.
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் 302 இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஆதிக்கம் செலுத்தியது.
நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் 400-க்கும் அதிகமான இடங்களை பிடித்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அரியணை ஏற முனைப்புடன் செயலாற்றி வருகிறது பா.ஜ.க.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பஞ்சாப் அகாலி தளம், சிவசேனா, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிய நிலையிலுல்,முழு தன்னம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் பாரதிய ஜனதா கட்சி முழுமையாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் அறிவிப்பு காலங்களில் மட்டும் தேர்தல் பணியாற்ற மாட்டோம் ; தேர்தல் பணி என்பது ஒரு அரசியல் கட்சிக்கு அன்றாட பணி ஆகும். இந்த வகையில் தேர்தல் வேலை என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு இயல்பானது என அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவித்து எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தொடர் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர்.
அக்கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமான அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவது என்ற தாரக மந்திரத்தை நிறைவேற்றும் பொருட்டு, அயோத்தி
மாநகரில் குழந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் பிரம்மாண்டமான முறையில் வெகு சீரும் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது . இந்த உணர்வுடனும், உற்சாகத்துடனும் நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
சுவர்களில் “தாமரை” சின்னத்தை வரைவதை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா டெல்லியில் தொடங்கி வைத்தார்.
தற்பொழுது நாடு முழுவதும் “தாமரை” சின்னத்தை வீதிகள் தோறும் கொண்டு செல்லும் பணியினை பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் ஆலயத்திற்கு அதிக அளவில் பொது மக்களையும், கட்சியினரையும் அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா கூட்டணி
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியினை இத்தேர்தலில் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” கூட்டணி உருவாக்கின. காங்கிரஸ், திமுக,கம்யூனிஸ்டுகள், தேசிய மாநாடு, சமஜ்வாடி,ராஷ்டிரிய ஜனாதளம், ஐக்கிய ஜனதா தளம்,அகாலி தளம்,திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தொடக்கத்தில் இணைந்து இக்கூட்டணியை உருவாக்கின.
இக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்ததால் மொத்தமாக 28 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லி, பாட்னா, மும்பை,பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
ஆலோசனைக் கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியினை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்படுவது என கூட்டணிக் கட்சி தலைவர்களிடையே ஒருமித்த தீர்மானமாக இருந்தது.
மேலும், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு குழுக்களை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் மனப்போக்கு
இதற்கிடையே, 5 மாநில தேர்தல் நடைபெற்றதால், இந்தியா கூட்டணியை, கூட்டணியில் உள்ள தலைவர்களே மறந்து விட்டனர். ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சி பெரிதும் நம்பியதால்,இந்தியா கூட்டணியை பற்றி கவலை கொள்ளாமல், அதன் அடுத்த நகர்வுகளை ஏற்படுத்தாமல் காங்கிரஸ் கட்சி மெத்தனமாக இருந்தது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில்,சமஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய பிரதேச தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட தயாராக இருந்தும், அவரை கமல்நாத் சிறுமைப்படுத்தியதும், சமஜ்வாடிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் தன்னிச்சையாக, இடங்களை அறிவித்ததும் இந்தியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், இந்தியா கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால் அதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
என்றாலும் கூட ஐந்து மாநில தேர்தலுக்குப் பின் இணைய வழியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, இந்தியா கூட்டணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தற்போது பல மாநிலங்களில் போட்டியிடும் இடங்கள் குறித்து,பேச்சு வார்த்தைகள் தொடங்கி நடந்து நிலையில் டெல்லியில் உள்ள ஏழு இடங்களில் நான்கு இடங்கள் ஆம் ஆத்மி கட்சியும், மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது
தனித்துப் போட்டி
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கடந்த டிசம்பர் மாதத்திற்குள் காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் கூறியிருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால் அதனை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. மேலும் மிக சொற்ப இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவோம் என கூறிய நிலையில் அதனை ஏற்க, கங்கிரஸ் மறுத்துவிட்டது.
இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது எனவும்,தேசிய அளவில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி கவலை கொள்ளாமல், மாநிலத்தின் நலன் முக்கியமாக கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக” பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
மம்தா பானர்ஜி இப்படி அதிரடியாக அறிவித்த அதே நாள், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் பகவான் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்து, இந்தியா கூட்டணியில் பிளவினை ஏற்படுத்தி விட்டார்.
இந்த அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், மிகப்பெரிய கூட்டணியில் இது போன்ற குழப்பங்கள், ஏற்படுவது
சகஜம்தான் எனவும், இது குறித்து பேசி தீர்க்கப்படும் என கூறியிருப்பது ஆறுதலான விஷயம்.
இந்தியா கூட்டணி உருவாகிய போதே அது காணாமல் போய் ,நொறுங்கி விடும் என அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க அக்கூட்டணி முழுமையாக இல்லாமல் போய்விடும் முறிந்து என்பதே நிதர்சனமான உண்மை என மேற்குவங்க, பஞ்சாப் முதல்வர்களின் அறிவிப்புகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
ராகுல் யாத்திரை
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி. ,இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து “பாரத் ஜோடா” யாத்திரையினை தொடங்கி நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர் என்றாலும், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ,யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் தடையை மீறி ராகுல் காந்தி யாத்திரையினை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அரசியல் காரணங்களுக்காக தடையினை ஏற்படுத்தி வரும் அம் மாநில நிர்வாகத்திற்கு, ராகுல் காந்தியின் யாத்திரை சுமூகமாக செல்வதற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
11 வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த யாத்திரை பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத செயல்களுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவித்து உள்ளனர்.
நிதீஷ் குமார்
இந்தியா கூட்டணியில் ஏனோதானோ என்ற மனப்பான்மையில் இருந்து கொண்டு வரும் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், அக்கூட்டனியின் ஒருங்கிணைப்பாளர் பதவியினை மறுத்து வந்த நிலையில், அம்மாநில அரசிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையிலும், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் தொடர்கிறது என அம்மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில், வலுவான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் குறைவான இடங்களை மட்டுமே அளிப்போம் என அறிவித்துள்ளதும், மேற்கு வங்கம் ,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு போட்டியிட இடங்கள் ஒதுக்கப்படாத சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 52 இடங்களில் வெற்றி பெற்றதை விட, குறைவான இடங்களே கிடைக்கும் என அகில இந்திய அளவில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாநில கட்சிகள் பகிர்ந்து அளிக்கும் குறைவான இடங்களின் எண்ணிக்கையே இது போன்ற கருத்துக்களுக்கு அடிப்படையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது . .
அமைப்பு ரீதியாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பரவி, வெற்றி மேல் வெற்றி பெற்ற நூற்றாண்டு கால பாரம்பரிய மிக்க காங்கிரஸ் கட்சியின் அசுரத்தனமான வளர்ச்சியை முன்னெடுக்க கட்சியில் உள்ள அனைவரும் தங்களின் பங்களிப்பை கடுமையாக அளிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
தமிழக நிலை
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ள, அதிமுக தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தேர்தலுக்காக 4 தனிக்குழுக்களை அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு செய்வதற்கான குழுவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,
கே. பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் இடம் பெற்று,முதற் கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலும்,பாராளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை தலைமையில் தேர்தல் பிரச்சார குழுவும், விளம்பரக் குழு தலைவராக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அக்கட்சியுடன் எஸ்டிபிஐ மட்டுமே கூட்டணியில் உள்ளது.தேர்தல் அறிவிப்புக்குப் பின் இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்குள் வரும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மண்டல வாரியான கூட்டங்களில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆளும் திமுக தரப்பிலும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இளைஞர்கள் அதிகமானோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் முதற் கட்ட ஆலோசனையும் நடந்து முடிந்துள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக பொருளாளர் டி. ஆர் .பாலு தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20-25 இடங்களில் திமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்படும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை திமுகவிடம் வழங்க உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அக்கட்சியின் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணி, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி,இந்திய ஜனநாயக கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,தமிழக முன்னேற்ற கழகம், சசிகலா உள்ளிட்டோரும் இடம் பெறுவர் என கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது.வட சென்னை வேட்பாளரும் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் தமது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல பணிகளை செய்து வருகிறார். அரசியலுக்கு வருவார் என கூறப்படும் நிலையில்,வரும் 4-ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்ய, இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லி செல்ல உள்ளார்.
Leave a Reply