பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Spread the love

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மீது ஆவேசமாக நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு உலக நாடுகள் இந்தியாவுடன் தோளோடு தோளாக நின்று, தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக பாகிஸ்தானுடன் ஏற்பட்டிருந்த அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தம், பாகிஸ்தானிய குடியினருக்கு வழங்கப்படும் விசா அனுமதி, வணிக ஒப்பந்தங்கள், என அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுமையாக மூடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கையாக, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வுகளை ரத்து செய்து, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்கும் அனுமதியை நிராகரித்துள்ளது.

அதன் அடிப்படையில், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் விமானங்கள் என அனைத்து வகையான விமானங்களும் இந்திய வான்வெளியில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா மேற்கொண்ட இந்த முடிவுகள், தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான பதிலடி நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.