,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த மூக்குப்பொடி

mookupodi siddhar
Spread the love

திருவண்ணாமலையில் பல ஆயிரக்கணக்கான மகான்கள், சித்தர்கள், ஞானிகள் வாழ்ந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன. அப்படி வாழ்ந்தவர் தான் மூக்குப்பொடி சித்தர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் சுவாமி கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை பகுதியில் கவுதம் ஆசிரமம் அருகில் தியானம் மேற்கொண்டார்.

முருகானந்தம் சுவாமிகள் மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால், யாரெல்லாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்களோ, அவர்களெல்லாம், மூக்குப் பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும், இவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வர்.

ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவும் மாட்டார். ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிப்பார். அடி வாங்கினார், பாவங்கள் தொலைந்து கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

இவர் உள்ளூரில் பிரபலமான தொழிலதிபர் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்து கல்லா பெட்டியை திறந்து கைக்கு வந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு செல்வார். மேலும், அந்தப் பணத்தை கோயிலுக்கு தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வரும் பக்தர்களுக்கோ அல்லது கிரிவலம் வருவதற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கோ கொடுப்பார்.
அவரை அழைத்து செல்வதற்கு என்றும் தனியாக டிரைவர் நியமித்து, அவர் இருக்கும் இடம் அருகில் கார் ஒன்றையும் தொழிலதிபர்கள் நிறுத்தி வைத்திருத்தனர். ஆனால், அந்த காரை பயன்படுத்தாமல், ஆட்டோவில் ஏறி கிரிவலம் செல்வார்.

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் சேதமாகும் என்பதையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் முன்கூட்டியே இவர் கூறியுள்ளார். இவர் ஓரிடத்தில் தங்காமல் அடிக்கடி வேறு வேறு இடங்களில் தங்கி வந்தார். நினைவு தெரிந்து சித்தர் குளிப்பதே இல்லை எனவும், இருந்தும் அவருடைய உடலில் இருந்து நறுமண வாசனை வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். சித்தரின் பார்வை பட்டாலே நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசியல் பிரபலங்கள் மூக்குப் பொடி சித்தரின் பக்தர்களாக இருந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை சென்று, இவரது அருளைப் பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவை முதல்வர் இரங்கசாமி இவரின் பக்தர்களாக அறியப்பட்டார். அது போல் கோவையை சேர்ந்த சரவணன் என்பவரின் கனவில் அவர் தலையில் அடிப்பது போல கனவு கண்டார். இதனையடுத்து, திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரை காண சென்ற போது அவர் தலையில் சித்தர் அடித்ததாக சொல்லி அவருடைய மகிமை குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த சித்தர் திருவண்ணாமலை கோயில் கிரிவலத்தில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். இவரைப் பற்றி தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிநாடு, வெளிமாநிலம் என்று பலரும் தெரிந்துகொண்டு, இவரது அருளைப் பெற திருவண்ணாமலை வந்து சென்றுள்ளனர்.

ஸ்ரீலஸ்ரீமூக்குப்பொடி சித்தரின் ஐந்தாம் ஆண்டு குரு பூஜை விழா 14.12.2023 வியாழக்கிழமையன்று திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மூக்குபொடி ஆசிரமத்தில் நடைபெற்றது. காலை சுவாமி அவர்களுக்கு சிறப்பான அபிஷேகமும், யாகசாலை பூஜையும் பின்னர் தீப ஆராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10.05 க்கு ஸ்ரீலஸ்ரீ மூக்குபொடி சித்தர் அவர்களுக்கு குருபூஜையும், மகேஸ்வரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.