மத்திய கிழக்கில் உருவான பதற்ற நிலையைத் தொடர்ந்து, கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக உள்ளார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திடீர் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களது வான்வழிப் பகுதிகளை மூடியுள்ளன. இதன் விளைவாக அந்தப் பகுதிகளில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட 16 வருகை விமானங்களும், 12 புறப்பாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 28 விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கச் சென்றுள்ள நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக உள்ளார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். “அஜித்குமார் துபாயில் நலமாக உள்ளார். அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று சென்னை திரும்ப திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு காரணங்களால் அவரது பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. நிலைமை சீராகியதும் அவர் சென்னை திரும்புவார்” என அவர் கூறினார்.
இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



Leave a Reply