கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக வழங்க வேண்டிய சுமார் 4000 கோடி ரூபாய் நிதியை திருப்பி தராமல் இழுத்தடித்து வருவதை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தைக் கண்டித்து, திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகவும், இந்த நிதி உடனடியாக தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் ஒரு முயற்சியாகும் எனவும், இது மாநில நலன்களுக்கு எதிரான பாஜக அரசின் தாக்குதல் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையை எதிர்த்து, தமிழக முதல்வர் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலைமையே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை 23.41% இருந்தது. அதே நேரத்தில், உத்திரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை 24.39% ஆக இருந்ததாகவும், தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினாலும், வட மாநிலங்கள் அதனை சரியாக செயல்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.
வடமாநிலங்களில் அதிக மக்கள் தொகை காணப்படுவதால், தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பெரிதும் பாதிக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளா சேர்ந்து 36% பங்களிப்பு அளிக்கின்றன, ஆனால் வட மாநிலங்கள் வெறும் 20% மட்டுமே பங்களிக்கின்றன எனவும் தெரிவித்தார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், திமுக எம்பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா இதுகுறித்து தெளிவான நிலைப்பாடு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக பாஜக அரசு செய்து வருவதாகவும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே மணிப்பூர் கலவரத்திற்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறினார்.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நீடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply