கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 59 வேட்பு மனுக்கள் நேற்று வரை தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனு முறைப்படி இல்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர். பின்னர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிக்க வந்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
இது குறித்து பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் அண்ணாமலை வேட்புமனு மீது நிறைய பிரச்சனைகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி மிகப்பெரிய தவறு செய்துள்ளனர் என்றார். அண்ணாமலையின் பிரமாண பத்திரம் நீதிமன்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் முத்திரை தாளில் கொடுத்துள்ளார் எனவும் இது முற்றிலும் தவறு எனவும் கூறினார்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது தவறு என்றார். மேலும் ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
Leave a Reply