ஆ.வெ.மாணிக்கவாசகம்
தமிழகத்தில் முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்கள்,அனல் அடிக்கும் கோடை வெயிலைக் காட்டிலும் பெரும் எரிமலையாக காணப்படுகிறது.
திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி,ஆளும் கட்சி என்னும் பிரமாஸ்திரத்தோடு தேர்தலை எதிர் கொண்டு களமாடி வருகிறது.
திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட. தேர்தல் அறிக்கையில், மாநில சுயாட்சி பற்றி குறிப்பிடுகையில், மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கவர்னர்களை நியமிக்கும் போது, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி நியமிக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு,அனைத்து தரப்பு மக்களுக்குமான தேவைகளை, இந்த அறிக்கையில் வழங்கி உள்ளதாக முதல்வர் பாராட்டிப் பேசினார் .
2021- சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளையே , இந்த தேர்தலிலும் திமுக கொடுத்துள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இண்டியா கூட்டணி சார்பில் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற போது,கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டதால்,தமிழகத்திற்கு அடிக்கடி வந்து போகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மத்திய பாஜக கொடுக்கவில்லை. வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட
தரவில்லை எனக் கடுமையாக குற்றம் சாட்டினார்.
அதிமுக அறிக்கை
33 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ,133 அம்சங்கள் இடம் பெற்ற தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் .
மாதம் ரூபாய் 3 ஆயிரம் மகளிர்க்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் .சென்னையில் உச்ச நீதி மன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 150 வேலை நாட்களாக உயர்த்தப்படும்.
கச்சத்தீவு மீட்பு தொடர்பாக,
புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா தொடர்ந்து வழக்கினை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிபெயர்ந்த இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட கையோடு தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமியும் திருச்சியில் இருந்து அதிரடியாக தொடங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தமது தேர்தல் யுகங்களை வகுத்து பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.
பாஜக 24 தொகுதிகளில் நேரடியாக போட்டியில் உள்ளது.பாஜக தலைவர் அண்ணாமலை,
முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன்,பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் நன்கு அறிமுகமானோர்.
கோவை தொகுதி
கொங்கு மண்டலத்தில் பெரு நகரமாக உள்ள கோவைக்கு அரசியல் வரலாறு அதிகம் உண்டு.
1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த தி.அ. ராமலிங்கம் செட்டியார் போட்டியின்றி தேர்வானார் .
1957-ம் ஆண்டு தேர்தலில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி சுப்பராயனின் மகள் பார்வதி கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் 1962 -ல் ராமகிருஷ்ணனும், மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் கே. ரமணி 1967-லிலும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றனர்.
தொடர்ந்து
1971 இல் பாலதண்டாயுதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மீண்டும் பார்வதி கிருஷ்ணன் 1973,77-ம் ஆண்டுகளில் கோவை மக்களின் பிரதிநிதியாக இருந்தார்.
இரா. மோகன் 1980ல் திமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984,89,91 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்ந்த சி. கே. குப்புசாமி வெற்றியினை தக்க வைத்துக் கொண்டார்.
திமுக சார்பில் மு. இராமநாதன் 1996- லும்,1998,99 தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் ,பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் கண்டு வெற்றியை ஈட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. சுப்பராயன் 2009-ம் ஆண்டிலும்,மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர். நடராஜன் 2009-ம் ஆண்டு தேர்தலிலும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.பி. நாகராஜன் ஆகியோரும் வென்றனர் .
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பி. ஆர் .நடராஜன் இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
வாக்காளர்கள்
6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவை பாராளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 30 ஆயிரத்து 63 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 52 ஆயிரத்து 602 பெண் வாக்காளர்களும்,
369 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 20 லட்சத்து 83 ஆயிரத்து 34 பேர் உள்ளனர்.
580 வாக்கு மையங்களில் 2 ஆயிரத்து 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன .
திமுக வேட்பாளர்
கோவை தொகுதியில்,கூட்டணி கட்சி வேட்பாளரே போட்டியிடுவார் என்ற நிலை இருந்தது.
திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர், நடிகர் கமலஹாசன்ஆகியோரில் ஒருவர் தான் களமிறக்கப்படுவார் திமுக தரப்பு முடிவு செய்திருந்தது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளரும் தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளார் என்ற தகவல் பரவியதால்
,கோவை தொகுதி களம் மிகுந்த பரபரப்பானது.
இதனால் திமுக ,கூட்டணிக்கு ஒதுக்க இருந்த தனது , நிலையை மாற்றிக் கொண்டு கோவை தொகுதி மீது திமுக கவனம் செலுத்த தொடங்கியது.
1996-ம் ஆண்டு திமுக சார்பில் மு. இராமநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
28 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் திமுக போட்டியிடுவது அக்கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அறிவாலயத்தில் 21 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
டாக்டர்கள் மகேந்திரன், கோகுல் ,மாவட்ட செயலாளர்கள் கார்த்தி,தளபதி முருகேசன், பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் மகள் உள்ளிட்டோரில் வாய்ப்பு வழங்கப்படும் என கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபட்டது.
மாவட்ட செயலாளர் கார்த்தி மீது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியதால், அவர் தேர்வாகவில்லை.
கடைசி வரை டாக்டர் கோகுல்தான் திமுக வேட்பாளர் என்றிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினரிடையே கருத்து கேட்கப்பட்டது.
அவர்கள்,மாநகர் மாவட்ட அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் பெயரினை பரிந்துரை செய்தனர்.
கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், கரூர், உடன் பிறப்புகளை களம் இறக்க வைத்து, திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க செந்தில் பாலாஜி தரப்பினரும் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்த போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அழைப்பின் பேரில் திமுகவுக்கு வந்தவர்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்த போது,
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைதான பின், கணபதி ராஜ்குமார் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.
அதிமுகவில் இருந்து அவர் வந்ததால், திமுகவினர் அவரை புறக்கணித்தனர்.
அமைதியானவர் என கண்டறியப்பட்ட கணபதி ராஜ்குமார்,
கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்.கணபதி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு, கோவையின் வடக்கு பகுதியில் உள்ள ஊர்களில் உறவினர்கள் அதிகமாக இருப்பதால், கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவளிப்பர்.
ஆளும் கட்சி, கூட்டணி கட்சியினர்,அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், டிஆர்பி ராஜா,மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, தளபதி முருகேசன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ளார்.
சிங்கை ராமச்சந்திரன்
துடியலூர் விவசாய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தவரும்,
அதிமுகவின் மூத்த. முன்னோடியுமான சுப்பையன் மகன் விக்னேஷ்,
கோவை தொகுதியில் போட்டியிட தேர்வாகி இருந்தார்.
தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக் கொள்வதாக விக்னேஷ் தயாராக இருந்த நிலையில்,பாஜக தலைவர் அண்ணாமலை போட்டிக்கு வருகிறார் என தெரிந்த அதிமுக தலைமையும் கடைசி நேரத்தில், வேட்பாளரை மாற்றினர்.
உயர்கல்வி படிப்பு, உயர் காவல் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு போட்டியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜ் மகன், சிங்கை ராமச்சந்திரனுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கம்போல் ஒவ்வொரு தேர்தலிலும், விண்ணப்பிப்பது போலவே சிங்கை ராமச்சந்திரன் விண்ணப்பித்திருந்தார்.
வேட்பாளர் பட்டியல் வெளி வந்த வியாழன் காலை, தமது பெயர் இருக்குமென சிங்கை ராமச்சந்திரன் எதிர்பார்க்கவில்லை.
தொழில் நுட்பத் துறை வல்லுனரான சிங்கை ராமச்சந்திரன்,
அகமதாபாத் ஐஐஎம்-ல் படித்தவர்
முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் பெரும் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன், தொகுதியை வலம் வருகிறார் .
கட்சியினர் மத்தியில் தெரிந்த இவரது முகம் , பொது மக்களுக்கு பெரிதாக அறிமுகம் இல்லை.
அண்ணாமலை
அனைவராலும் அறியப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டியைச் சேர்ந்தவர்.
லக்னோ
ஐ ஐ எம்-ல் உயர் படிப்பை முடித்த பின், இந்திய காவல் பணிக்கு சென்றவர்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் 2021-ல் சேர்ந்தவர்.
கட்சியின் மாநில தலைவராகி, பாஜகவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
அவர் போட்டியிடுவார் என தகவல் பரவிய நாள் முதலே கோவை தொகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.தென்னிந்தியாவின் ஸ்டார் தொகுதியாகவும் மாறிவிட்டது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தல் நடைபெற உள்ள 40 நாட்களிலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவையில் தங்கி இருந்தாலும், தான் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையுடன் கூறினார்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே தான் போட்டி என்றும், ஒரு பைசா காசு யாருக்கும் கொடுக்காமல், மக்களை முழுமையாக நம்பி களத்தில் உள்ளேன் என அண்ணாமலை கூறினார்.
Leave a Reply