பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில் மக்கள் சேவை மையம், தனியார் மருத்துவமனை, உலக மலையாளிகள் அமைப்பின் சார்பில் ‘நலம்’ எனும் இலவச மருத்துவ முகாம் புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
முகாமில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், கண் சிகிச்சை மற்றும் எலும்பு மூட்டு பிரிவுகளில் நிபுணர்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டன. புலியகுளம் மற்றும் சுற்றுவட்டார மக்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கோவையில் வாரந்தோறும் மக்கள் நலத்திற்காக, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு ‘நலம்’ என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார். கோடைக்காலத்தில் பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் சரும மற்றும் உடல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.
திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், “மாநிலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் சட்டமன்றத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் முதியவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகின்றன. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. இது மக்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது” என்றார்.
கல்லூரியின் பழுது பார்க்கப்பட்ட வசதிகள் தொடர்பாகவும் குற்றம்சாட்டிய அவர், “புதிய இருக்கைகள் அறைகளில் பூட்டப்பட்டு பயன்படுத்தப்படவில்லை. கல்வித்துறையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன” என்றார்.
மதவெறி தொடர்பாகவும், “பாகல்காம் தாக்குதல் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது. கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. மதவெறி தாக்குதலால் காவலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மதவெறி இல்லை என முதல்வர் கூறுவது பொய். கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆல்கொய்தாவுடன் தொடர்புடைய இளைஞர்கள் இருப்பது அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உள்ளது” என கூறினார்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் குறித்து வைகோ கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், “12 ஆண்டுகளில் நிதி முறைகேடுகளுக்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்களின் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து வைகோ ஏன் பேச மறுக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
பெண்கள் அரசியலுக்கு வருவதில் உள்ள சவால்களை எடுத்துரைத்த அவர், “அரசியலுக்கு வரும் பெண்களுக்கு பா.ஜ.க. துணை நிற்கும். மக்களின் நலனுக்காக செயல்பட விரும்பும் பெண்கள் பா.ஜ.க-வில் சேரலாம்” என அழைப்பு விடுத்தார்.
நீட் தேர்வு குறித்து, “தி.மு.க பொய் பிரச்சாரம் செய்த போதும், ஆண்டுதோறும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வாய்ப்பு நீட் மூலம் ஏற்படுகிறது” என்றார்.
பத்திரிகை சுதந்திரம் குறித்தும் தி.மு.க-வின் இரட்டைக் கொள்கைகளை சுட்டிக்காட்டிய அவர், “திமுக அரசுக்கு எதிராக பேசியால் தாக்குதல் நடத்தப்படுகிறது. சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிராக பதிவுகள் செய்யும் சிலரைப் பற்றி புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என குற்றம்சாட்டினார்.
முழுமையான அரசியல், சமூக விமர்சனங்களை தனது பேச்சில் வலியுறுத்திய வானதி சீனிவாசன், தமிழகத்தின் தற்போதைய நிர்வாக சூழ்நிலை குறித்து கேள்விகள் எழுப்பினார்.
Leave a Reply