விசிறி சாமியார் என மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட திருவண்ணாமலை மகான் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 105-ஆவது ஜெயந்தி விழா, இவரது பிறந்த தினமான டிசம்பர் 1-ல் தமிழகம் எங்கும் கொண்டாடுகின்றனர்.
இவர், 1918-இல் வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் பிறந்தார். ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்த இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் இருந்தனர். சிறு வயதிலேயே யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்ட இவர் காசியில் கங்கை ஆற்றாங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக இருந்தார்.
வளர்ந்த பின்னர் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்குள் இருந்த ஆன்மிகப் பசி அடங்காததால், தனக்கென ஒரு குருவைத் தேடி அலைந்தார். இவர் அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை சந்தித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி ராமதாசரின் ஆசிரமத்தில் பக்தி யோகத்தை கற்றார். குரு ராமதாசரிடமிருந்து “ஓம் ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்ற யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்த யோகி ராம்சுரத்குமார் இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். திருவண்ணாமலையில் துவக்க காலத்தில் இவர் தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார், பின்பு திருவண்ணாமலை கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். சில காலம் கழித்து அவரது சீடர்களின் வற்புறுத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் அருளி கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையின் காடுகள், கிரிவலப்பாதை, திறந்தவெளி, கோயிலின் அருகில் இப்படிப் பொதுவெளியில் தங்குவதையே விரும்பினார். சிலருக்குப் பித்தனாகவும், சிலருக்குக் கடவுளாகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டார். அற்பமான சித்து விளையாட்டுகளைச் செய்தால் தானே மக்கள் ஒருவரை சாமியாக நினைப்பார்கள். எனினும் அவர் எந்தவிதமான சித்துக்களையும் செய்து காட்டுவதோ, உபன்யாசங்களைக் கூறுவதோ செய்யவில்லை. எவரிடமும் எதிர்காலத்தைக் கணித்து கூறியதில்லை. அன்போடு அணுகும் பக்தர்களின் இதயங்களில் அமைதி மட்டும் ஆனந்தம் தந்து அவர்களின் ஞான குருவாக இருந்தார். அடைக்கலம் அடைந்தவர்களுக்குக் கைகளை உயர்த்தி, பயப்படாதே என சைகை செய்வார். அதுபோதும் அந்த பக்தர்கள் இன்றுவரை அமைதியும் நிம்மதியும் உணர்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் ஆகியவை இருந்தது. இதனால் அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது.
இவர் காலம் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து அதையே மந்திரமாக்கி பல அற்புதங்கள் செய்த சித்தர். பக்தர்கள் இவரை கடவுளின் குழந்தை என்று போற்றினார்கள். இவரின் பார்வை பட்டாலே போதும் சகலமும் சித்திக்கும் என்று நம்பினார்கள். யோகி ராம்சுரத்குமார்.20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி பக்தர்களின் உள்ளத்தில் அமர்ந்து நற்செயல்களை செய்து கொண்டிருக்கிறார். எளிமையாக அவதரித்தாலும் இவரது வாழ்வு பலருக்கு நம்பிக்கையை அளித்த பிரமாண்ட வரலாறாகவே இருக்கிறது.

Leave a Reply