இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.தாமோதரன், விபி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, மாவட்ட அவைத் தலைவர் ஏ.வெங்கடாசலம், நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
இந்த போராட்டம் எதை குறிக்கின்றது என்றால் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று அனைத்து மக்களும் நினைக்கிறார்கள் என்பதை நிருபிக்கிறது. திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
ஏழை பட்டியலின மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று வேலைக்கு அமர்த்தி சூடு வைத்தும், கடுமையாக தாக்கியும் பல்வேறு கொடுமைகளை செய்துள்ளார்கள். அந்த மாணவியின் பேட்டிகளை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. அதுபோல் வேங்கை வயல் பகுதியில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இன்று வரை குற்றவாளிகளை கைது செய்யமுடியவில்லை,
எங்கே போனார் கனிமொழி. பட்டியலின பெண்ணிற்காக வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதா, உங்கள் கட்சிக்காரர் என்றால் ஆதரவு தெரிவிப்பதா? பொள்ளாச்சியில் எந்த தொடர்பும் இல்லாத சட்டமன்ற உறுப்பினரின் மகனை தொடர்பு படுத்திய கனிமொழி தற்போது எங்கே சென்றார்.? அன்று உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்தது அதிமுக ஆட்சி.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்காக என்ன திட்டங்களை கொண்டு வந்தது? அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கூட முடக்கிவிட்டது. கோவை மாவட்டத்தில் அவிநாசி உட்பட 11 சட்டமன்ற தொகுதி உள்ளது. நீங்கள் என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள். என்ன செய்தீர்கள் என்று கூற முடியுமா சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழ்நாட்டுக்கு நீங்கள் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள். ஏதாவது சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த இத்தனை திட்டங்களை நாங்கள் பட்டியலிடுகிறோமே உங்களால் முடியுமா?
வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டு போட தயாராக இல்லை. காரணம் யாருமே இன்று நன்றாக இல்லை, அது மட்டுமல்ல அக்கட்சியை சேர்ந்தவர்களே இந்த ஆட்சி மீது வெறுப்பாக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு என அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.
திமுகவின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒரே கையில் ரத்து செய்யப்படும் என்றார். ரத்து செய்தார்களா? இன்னும் நீட் குறித்து பேசிக்கொண்டு மாணவச் சமுதாயத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. திமுக ஆட்சியில் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு எத்தனை தொலைக்காட்சிகள் செய்திகளாக நேரலையில் ஒளிபரப்பினார்கள்.
நீட்டிற்காக எடப்பாடியார் என்ன செய்தார் என்று கேட்கிறது திமுக. நீட் தேர்வில் 7..5 சதவீத இட ஒதுக்கீடை பெற்றுத் தந்தார். மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை அமுல்படுத்திய நிலையில் முதலமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி நீட்டிற்காக அரசாணையை வெளியிட்ட ஒரே முதல்வர் எடப்பாடியார் மட்டுமே.
ஹஜ் பயண மானியம் 6 கோடியை பாஜக அரசு ரத்து செய்த போது எடப்பாடியார் அந்த 6 கோடி ஹஜ் பயண மானியத்தை பெற்று தந்தார். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்தவர் எடப்பாடியார் தான்.
திமுக இந்த 3 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
பாராளுமன்ற தேர்தல் வருகிறது. மக்கள் இப்போதுதான் திமுக குறித்து சிந்திக்கிறார்கள். நமக்கு திமுக ஒன்றும் செய்யவில்லையே. மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள். ஆனால் 2 ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றி வந்தனர். எடப்பாடியார் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபிறகு ஆயிரம் தந்தனர். அதனையும் பாதிப்பேருக்கும் மட்டும் தந்தார்கள் பல நிபந்தனைகளை விதித்து. திமுகவே இது உங்கள் வீட்டு பணமல்ல. இது மக்களின் வரிப்பணம். மக்களின் பணத்தை கொடுப்பதற்கு திமுக யோசிக்கிறது. ஆயிரம் பணம் கிடைக்காதவர்கள் முறையிட்டபோது அவர்களை திமுக மிரட்டுகிறது.
காவல்துறையே நடுநிலைமையோடு நடந்து கொள். கழக ஆட்சிகாலத்தில் கண்ணியத்துடன் உங்களை நடத்தினோம். ஆனால் திமுக ஆட்சியில் காவல்துறை மோசமாக நடந்து கொள்கிறது. திமுகவிற்கு அடிமையாக காவல்துறை உள்ளது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுகிறீர்கள். கொலை கொலையில் ஈடுபடுபவர்கள் எல்லாம் காவல்துறை விட்டுவிடுகிறது. கஞ்சா விற்பவர்களை எல்லாம் காவல்துறை விட்டுவிட்டு பொள்ளாச்சியை சேர்ந்த சகோதரரை தீவிரவாதிகளை பிடிப்பது போல் நள்ளிரவில் வீடு தேடி சென்று கைது செய்கிறார்கள்.
காவல்துறையே கடமையைச் செய்யுங்கள். காவல்துறையே இந்த ஆட்சி நிரந்தரமாக இருக்காது. மக்களுக்கு எதுவும் செய்யாத ஆட்சி கண்டிப்பாக நீடிக்காது. காவல்துறையே மாறிக் கொள். திமுகவினர் கொடி கட்டினால் பாதுகாப்பு. அதிமுக கொடி கட்டினால் பொய்வழக்கு. இது என்ன நியாயம்.
உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெல்ல வேண்டியது. திமுகவினரின் முறைகேடுகளால் எங்களது வெற்றி தடுக்கப்பட்டது. மக்கள் தெளிவாக உள்ளனர். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும். விடுபட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். எப்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமையும். எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வர் ஆவது உறுதி.
கோவை மாவட்டத்தை புறக்கணித்து எங்களது மக்களை சிரமப்படுத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுவோம்.கழக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். திமுக மூன்றாண்டு காலத்தில் என்ன செய்தது?
நியூஸ் 7 ரிப்போர்ட்டர் டாஸ்மாக் பார் குறித்து முறைகேடுகள் குறித்து எழுதினார். அவருக்கு மிரட்டல் வருகிறது. காவல்துறையிடம் தொடர்ந்து புகார் அளிக்கிறார். பாதுகாப்பு கேட்கிறார். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. அதன் பின்பு அந்த நிருபர் கொடூரமாக தாக்கப்படுகிறார். பத்திரிகை துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.
மேட்டுப்பாளையத்தில் எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஏகே.செல்வராஜ் அவரது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகளுக்கு நிதி ஒதுக்கிறார். திட்ட அறிக்கையை 3 மாதங்களாகியும் நகராட்சி தரவில்லை. முறைப்படி அனுமதி வாங்கிக்கொண்டு ஆணையாளரை சந்திக்க செல்கிறார். அப்போது திமுக தலைவர் பிரச்சனை செய்கிறார். ஆணையாளரை திட்டியது திமுகவினர். ஆனால் வழக்கு எங்கள் எம்எல்ஏ மீதும், எங்களது கட்சியை சேர்ந்த 20 பேரும் மீது வழக்கு. இது என்ன நியாயம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள்.
தேர்தல் நேரங்களில் ஏதாவது ஒரு பொய் சொல்லிக்கொண்டு ஓட்டுகளைப் பெற்றுக் கொண்டு திமுகவினர் ஓடி விடுவார்கள். இன்றைய சூழ்நிலையில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் ஓட்டு போடுவார்களா? சிறுபான்மையினர் ஓட்டு போடுவார்களா? ஏழை எளிய மக்கள் ஓட்டு போடுவார்களா? நடுத்தர மக்கள்¢ ஓட்டு போடுவார்களா? யாரும் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இல்லை. இதுதான் இன்றைய நிலைமை. இந்த ஆட்சி வீட்டிற்கு போவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை.
பாராளுமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை அதிகமான வாக்கு வித்தியாசம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நமக்கு எதிரி திமுக. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதியிலும் வெல்வோம். இரட்டை இலைக்கு வாக்களிக்க மக்களும் தயாராக உள்ளனர்.
நாளை நமதே. நாற்பதும் நமதே. திமுக ஆட்சி விரைவில் ஒழியும். எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமையும். விடுபட்ட திட்டங்கள் அத்தனையும் நிறைவேற்றப்படும். ” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டிகே.அமுல் கந்தசாமி ஏற்பாட்டில் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, எம்கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, செல்வி பத்மினி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜிகே.விஜயகுமார், மாநில அண்ணா தேயிலை தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வால்பாறை வி.அமீது, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply