தமிழ் பெயர் பலகை வைக்க முயற்சி – 20 பேர் கைது, கோவையில் பரபரப்பு

Spread the love

தமிழ்நாட்டின் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூர் இண்டர்சிட்டி ரயிலில் தமிழ் மொழியில் பெயர் பலகை இடப்படவில்லை என்ற காரணத்தால், கோவையில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இந்த ரயில் சுமார் 300 கிலோமீட்டர் தமிழ்நாட்டின் வழியாக செல்வதையொட்டி, ரயில் பெட்டிகளில் தமிழ் பெயர் பலகையும் இருக்க வேண்டும் என தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். ஆனால், ரயிலில் கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்துத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், “தமிழ் மொழியும், தமிழ்நாட்டு மக்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என முழக்கமிட்டனர்.

பின்னர், மதியம் எர்ணாகுளம்–பெங்களூர் ரயில் கோவையை வந்தடைந்தபோது, அதன் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகள் ஒட்டும்படி அவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களில் 20 பேர் மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனால், கோவை ரயில் நிலையம் முன்பு சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *