,

தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்பது என் விருப்பம் – திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

modi
Spread the love

தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது” என்று திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “தமிழக மக்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தத் திட்டங்களால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். மேலும், துவங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.​ கடந்த ஆண்டின் இறுதியில் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். மாநிலத்தில் அண்மையில் கனமழையால் உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் அதிகம் ஏற்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது” என்றார்.

எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாசாராத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.​ தமிழ் பண்பாட்டை பற்றி நான் பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன.

உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அதேநேரம், இந்தியாவின் நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளதன் நேரடி பயன் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசின் ‛மேக் இன் இந்தியா’ திட்டத்தின் சிறந்த தூதுவராகவும் தமிழகம் மாறி வருகிறது. திருச்சியில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தால் வளர்ச்சி பெருகுவதோடு, விமான நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சாலையுடன் இணைப்பதால் வெளிநாட்டினர் வருகையும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சியடையும். ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதே மத்திய அரசின் நோக்கம். அதை நோக்கியே மத்திய அரசு செயல்படுகிறது. பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் மூலமாக இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பை காண முடிகிறது. அதேநேரம், தமிழகத்துக்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.​” என்றார் பிரதமர் மோடி.