தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் ஆதிக்கம் உறுதி – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

nainar nagendran
Spread the love

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களிடம் உரையாற்றினார். தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை வலியுறுத்தி, சட்டம் ஒழுங்கு கைகூடவில்லை என்று விமர்சித்தார்.

சமீபத்தில் பட்டுக்கோட்டையில் பாஜகவின் முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும், சிவகிரி மற்றும் பல்லடம் பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவங்களையும் நினைவூட்டிய அவர், “இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் தங்களை உரிமை செலுத்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றன. கொங்கு பகுதிகளில் தோட்டங்களை விட்டு மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” எனக் கடுமையாக எச்சரித்தார்.

இத்தகைய சம்பவங்கள் குறித்து இதுவரை அரசும், அதிகாரிகளும் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததற்கான சாட்சியம் இல்லை என்றும், தவறான முறையில் செயல்படுகிற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் நயினார் வலியுறுத்தினார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடிமக்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். “யார் வேண்டுமானாலும் இருந்தாலும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்,” என்றார்.

மதுரை ஆதீனம் விவகாரம் மற்றும் காவல் துறை நடவடிக்கைகள் குறித்து பேசும் போது, “திமுக அரசு வழக்குப் பதிவு செய்யும் நபரைத்தான் முதலில் கைது செய்கிறது. இதுவே அவர்களின் வழக்கமான நடைமுறை,” எனவும் விமர்சித்தார்.

சமீபத்தில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமளித்த நயினார், “பாஜக மதம் குறித்து பேசவில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மட்டுமே முன்வைத்தோம். மத விவகாரத்தை தூண்டுவதை முதல்வர் தான் செய்கிறார்,” எனக் கூறினார்.

அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி சிறுபான்மை வாக்குகளை பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார் ஐக்கிய ஜமாத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதையும், ஜப்பார் போன்று பலர் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார்.