தமிழ்நாட்டின் 69-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாட்டிற்கு இன்று 69-ஆம் பிறந்தநாள். 69 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள்.”
அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது:
“மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்களுடன் உறவு வைத்திருந்தாலும், ஆற்று நீர் உரிமைகளை இழந்துள்ளோம். தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் துரோகத்தால் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம்.”
அவர் தொடர்ந்து,
“தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி மற்றும் தமிழ் மொழி கட்டாயப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் விருப்பமின்றி இருக்கின்றனர். சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு அதற்கான முனைப்பை காட்டவில்லை.”
“தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை இழந்து வருகிறோம். இது மாற்றப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திறன் படைத்த தமிழ் அரசை அமைப்பதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது,” எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (நவம்பர் 1) மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளாகவும், தமிழ்நாடு மாநிலம் உருவாகி 69 ஆண்டுகள் நிறைவடைந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.



Leave a Reply