தமிழக அரசியலில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக, தற்போது ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அணிகளாக அதாவது, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத உயர்வை, மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்திற்குப்பின் அதாவது ,1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தது.
தொடர்ந்து 1957, 1962 தேர்தல்களிலும் காங்கிரஸே வெற்றி பெற்றது.
1967-ம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.
அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே, திமுக அதிமுக என மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், நடந்து முடிந்த பொது தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ,பாஜக கூட்டணி ,நாம் தமிழர் கட்சி ஆகியன களம் கண்டனர்.
இதில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி ஒட்டு மொத்தமாக 52.65 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது.
கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில்,திமுக 32.76, காங்கிரஸ் கட்சி 12.76,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.44, மார்க்சிய கம்யூனிஸ்ட் 2.40, விடுதலை சிறுத்தைகள் 1.18 ,இந்தியை யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவிகித ஓட்டுக்களை பெற்றது.
இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி கண்டது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி ஒட்டு மொத்தமாக 47.01 சதவிகித ஓட்டுக்களை பெற்று , 40 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த தேர்தலை விட இது 5.64 சதவீதம் குறைவாகும்.
திமுக 26.93, காங்கிரஸ் கட்சி
10 .67, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி 2.15, மார்க்சிய கம்யூனிஸ்ட் 2.52 ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.67 சதவீதங்களை பெற்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக தலைமையிலான கட்சிகளே கூட்டணியில் நடந்து முடிந்த தேர்தலில் இடம் பெற்றிருந்தன.
இந்திய ஜனநாயக கட்சி மட்டும் ,பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு சென்று விட்டது.
கூட்டணியிலும் போட்டியிட்ட தொகுதிகளிலும் பெரிதாக மாற்றம் இல்லாத சூழ்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது ஆளும் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கூட்டணி பலம், ஆட்சி அதிகாரம், பல நட்சத்திர வேட்பாளர்கள்,அனுபவம் பெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் என அனைத்தும் இருந்தும், ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணி
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி ஏற்படுத்தப்பட்டு பாஜக, பாமக, தேமுதிக, தாமாக உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டது.
அத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 30.27 ஓட்டு சதவீதம் பெற்றது.
அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார்.
கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 5.42,பாஜக 3.66, தேமுதிக 2.19, தாமாக
0.52 சதவிகித ஓட்டுக்களை பெற்றிருந்தன.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஒட்டு மொத்தமாக 22.66 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது.
அதிமுக மட்டும் தனிப்பட்ட முறையில் 20.46 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக 21 இடங்களில் போட்டியிட்டு தேனியில் மட்டும்
வெற்றி பெற்றது.
நடந்து முடிந்த தேர்தலில் 35 இடங்களில் அதிமுக போட்டியிட்டது.
கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட குமரகுரு மட்டும்
5 லட்சத்து 07,805 ஓட்டுக்களை பெற்று, அதிக ஓட்டுக்கள் வாங்கிய அதிமுக வேட்பாளர் ஆவார்.
சேலம், நாமக்கல் ,விழுப்புரம் ,சிதம்பரம் ஆகிய தொகுதிகளில்
4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களும்,கரூர், காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு ,திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்குகளையும் அதிமுக பெற்றுள்ளது.
தென் சென்னை ராமநாதபுரம் உள்ளிட்ட
8 தொகுதிகளில் அதிமுக வைப்புத் தொகையை இழந்துள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் இல்லாத நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி
1990 கால கட்டங்களில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா தமிழகத்தில் பிரபலமாகவில்லை.
1998-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜகவுடன் முதல் முறையாக கூட்டணி வைத்து மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பின் 1999 ஆம் ஆண்டு திமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2004, 2009 தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி கண்டது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி இருந்து அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
பாஜக மட்டும் 19 தொகுதிகளில் போட்டியிட்டது.
அதில் கோவை, நீலகிரி, மதுரை, தென் சென்னை, மத்திய சென்னை திருவள்ளூர்,கன்னியாகுமரி, வேலூர் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 11 இடங்களில் பாஜகவும், கூட்டணி கட்சிகளான பாமக 6, தாமாகா 3, அம முக 1 ஆகிய தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.
மேலும் போட்டியிட்ட 23 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது.
மேலும் பாஜக கூட்டணி 18.28 ஓட்டு சதவீதங்களை பெற்று, திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது .
பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட
12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இரட்டை இலக்க சதவீத வாக்கு வங்கியை பெற்று முன்னேறி வருவதாக நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி
தமிழ் தேசியத்தை முன்னுறுத்தி கடந்த 2010-ம் ஆண்டு மே 18ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது.
திரைப்பட இயக்குனரான சீமான், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி முதல் முறையாக போட்டியிட்டு 1.07 சதவீத ஓட்டுக்களை பெற்றது. 117 ஆண் வேட்பாளர், 117 பெண் வேட்பாளர் என சரிசமமாக 234 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
தொடர்ந்து ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2.15 சதவிகித வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது .
2019 ஆம் ஆண்டு 22 தொகுதி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3.15 சதவீத ஓட்டுக்களை பெற்றது .
அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2.89 சதவீத ஓட்டுக்களை பெற்றது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72 சதவீத ஓட்டுக்களை பெற்று, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்தது.
2023 -ம் ஆண்டு நடந்த ஈரோடு இடைத்தேர்தலில்
6.35 சதவீத ஓட்டுக்களை பெற்றது.
தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 8.22 சதம் ஓட்டுகளைப் பெற்று முன்னேறி உள்ளது.
என்றாலும் போட்டி யிட்ட அனைத்து இடங்களில் வைப்புத் தொகையை இழந்தனர்.
சிதம்பரம், ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஆகிய ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
8.22 சதவீத ஓட்டுக்களை நாம் தமிழர் கட்சியை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சி அங்கீகாரம் பெற உள்ளது.
கடந்த 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளே கோலோச்சி வரும் நிலையில்,பாஜக 12 சதவீதம், நாம் தமிழர் கட்சியை 8 சதவிகிதம் பெற்று இருப்பது திராவிட கட்சிகளின் ஆட்சியைக் கண்டு, பொதுமக்கள் சலிப்படைந்து விட்டனாரோ என எண்ண தோன்றுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறை கூவலுக்கு ஒரு சாரார் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்றே அறிய முடிகிறது.
அதே போல ஓட்டு சதவிகிதத்தில் படிப்படியாக முன்னேறி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தமிழ் தேசிய பேச்சிற்கும்,அவரது முன்னெடுப்புகளுக்கும் ஆதரவு கரங்களை பொதுமக்கள் அளிக்க தயாராகி விட்டனர் என்றே அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் காட்டுகிறது.
மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரும் எந்த கட்சியினருக்கும் அனைவரின் ஆதரவு உண்டு என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
Leave a Reply