, ,

தன்னடக்கத்தின் அடையாளமான கொங்கணர்

கொங்கணர்
Spread the love
பதினெண் சித்தர்களில் கொங்கணருக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கேரளத்தின் கொங்கண தேசத்தில் தான் அவர் அவதரித்தார்.

கொங்கணர் தொடக்கத்தில் மிகுந்த அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தன் பெற்றோருக்கு உதவியாக கலங்கள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, அதிக பேராசை கொண்டு . ‘பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் செய்த அற்புதங்களை பார்த்து வியந்து எப்படி அவ்வாறு செய்கிறார் என்று அறிந்துகொள்ளப் போய் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என எண்ணி போகரின் மாணவராக மாறினார்.

கொங்கணர் என்ற பெயர் இவருக்கு காரணம் ஒருமுறை இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு இவர் மேல் எச்சமிட, அதனால் இவர் தவம் கலைந்து, கோபமுடன் கொங்கணர் பார்க்க, அந்த கொக்கு அதே இடத்தில் எரிந்து சாம்பலானது . நீண்டநாள் தவத்திலிருந்து அந்த தவம் கலைந்ததால் அருகில் இருந்த வீட்டிற்கு ஆகாரம் உண்ண சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந்தாழ்த்தி கொங்கணருக்கு அன்னமளித்தார்.

கொங்கணர், அந்த பெண்ணையும், சினத்துடன் நோக்கினார். உடனே, அந்த பெண், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர். கொங்கணவர், அந்த பெண்மணியின் ஞானதிருஷ்டியை எண்ணி வியந்தார்.

அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார். பின் போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார். பின் தவத்தின் அருமையை உணர்ந்த கொங்கணர், பெரும் ஞானியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது.

கொங்கணர் தன் வாழ்வின் இறுதி காலத்தில் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே அப்போது வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய கொங்கணர் திருப்பதி திருமலையின் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார்.