பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ளும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது, காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான www.jallikattu.tn.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் முழு வீடியோவும் பதிவு செய்யப்பட வேண்டும். ” என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply