,

சொத்தை ஆக்ரமிக்க முயற்சிப்பதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெண் கண்ணீர் மல்க புகார்

Spread the love

கோவை:-

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் திவ்யா (34) என்ற பெண், அவரது தந்தை சர்குணனின் வளர்ப்பு தாயார் பழனியம்மாளுக்கு சொந்தமாக செல்வபுரம், குமாரபாளையம் கிராமத்தில் உள்ள 36 1/2 செண்ட் நிலம், உயில் சாசனம் மூலம் தந்தைக்கு வந்ததாகவும், கடந்த பல வருடங்களாக அந்த சொத்தை தந்தையின் குடும்பத்தினர் அனுபவித்து வருவதாகவும், புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலத்தை அபகரிக்க தீபா விஸ்வநாதன், ஈஸ்வரி, ரேணுகா, ராணி ஆகியோர் திட்டமிட்டு உள்ளதாகவும், கடந்த ஏப்ரல் 15 ம் தேதி, JCB, டிராக்டர், அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்ததாகவும் மேலும் அவரை JCB-யால் மோதுவோம் என மிரட்டியதாகவும், 30 வயதுடைய நான்கு ஆண்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல் துறைக்கு தகவல் அளித்த பின்பும் அவர்கள் இடத்தை விட்டு செல்லவில்லை எனவும் திவ்யா தெரிவித்து உள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மீண்டும் அவர்கள் அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாநகர காவல் ஆணையரிடம் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், தீபா விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.