சேவையே வாழ்வியல் தத்துவம் மாவட்ட ஆளுநர் ஆர்.காளியப்பன் பெருமிதம்

lions club
Spread the love

“அருமையாய் சேவை மனம் கொண்டு
அன்பினால் அனைத்தையும் வென்று
கருமமே கண்ணாய் கொண்டு
கடும் பணியினை கருத்தாய் ஏற்று
அலையன்ஸ் சங்கத்தை ஆழமாய் நேசித்து, மதியுறு நூட்பத்தால் மாவட்ட ஆளுநராய் கனிவோடு பணி செய்ய
காத்திருக்கும் காளியப்பன் வாழி….!’’
என எல்லோரும் போற்றிப் புகழும் பேற்றினைப் பெற்றவர் அலையன்ஸ் கிளப் 262 S. மாவட்ட ஆளுநர் ஆர்.காளியப்பன். பிறந்து ஆளானது முதல் தற்போது வரை சமுதாய சேவை மட்டுமே சளைக்காமல் செய்து வரும் சாதனைக்கு அதிகமான சொந்தக்காரர்.
ஈதல், இசைபட வாழ்தல் என்பது வள்ளுவப் பேராசானின் வாக்கு. ஈதல் – பிறருக்கு உதவுதல், இசைபட வாழ்தல் – அப்படி பிறருக்கு கொடுத்தால், அதனால் வரும் புகழோடு வாழ்வது. வள்ளுவனின் வரிகளுக்கு ஏற்றாற் போல தம் வாழ்வினை ஏற்படுத்திக் கொண்டவர் மாவட்ட ஆளுநர் காளியப்பன். சேவை என்பதை வெறும் செயல் திறனாக இல்லாமல் அதனை வாழ்வியல் தத்துவம் என கருதினார் தேசத் தந்தை அண்ணல் காந்தி மகான். அவரது கருத்துக்கு ஏற்பவும், வாழ்வின் பெரும் பகுதியை சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறார் புதிதாக மாவட்ட ஆளுநராக பதவியேற்றுள்ள காளியப்பன். சர்வதேச அலையன்ஸ் சங்க மாவட்டம் 262 S, 4-வது கேபினட் பதவி
ஏற்பு விழா கோவை கொடிசியா அருகே உள்ள ஜெ.ஆர். ஆர்ச்சிட் அரங்கில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 262 S மாவட்ட ஆளுநராக ஆர். காளியப்பன் அனைவரின் உற்சாகமான கரகோஷத்துடன் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். மாவட்ட ஆளுநர் காளியப்பன் உடன் துணை ஆளுநர்களாக என்.சி. அரங்க
நாதன், பி.எஸ். அருண்குமார், எம் முருகானந்தம் ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர். கோவை காளப்பட்டியை பூர்வீகமாக கொண்ட ஆர்.காளியப்பன், எளிமையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தையார் ராயப்பன், தாயார் திருமாத்தாள். வாழ்வாங்கு வாழ்ந்த இந்த தம்பதியரின் முதல் மகனே ஆர்.காளியப்பன், இளைய சகோதரர் அல்லிமுத்து. ஆர்.காளியப்
பன் – பிரேமா தம்பதியரின் மூத்த மகள் சத்யபாமா எம் எஸ் சி., எம் பி ஏ .,படிப்பையும், இளைய புதல்வி லதா எம்இ, எம்பிஏ-வும் முடித்து உயர்வான திருமண வாழ்வில் உள்ளனர். 3 பேத்திகள், ஒரு பேரன் இருக்கின்றனர்.
மாவட்ட ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர். காளியப்பன் பள்ளிப்படிப்பை காளப்பட்டி அரசு பள்ளியிலும், பி. யூ .சி. படிப்பை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியிலும், பட்டம், பட்ட மேற்படிப்பை கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் நன்கு கற்றார்.
படிக்கும் காலத்திலேயே, கல்விதான் அறிவுச் சுடர், கல்வியே உயர்வு என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு காளப்பட்டி, கணபதி பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக டியூ
ஷன் சொல்லிக் கொடுத்தார். மேலும் அரசு கல்லூரியில் படிக்கும் போது மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றினார். படிக்கும் காலத்திலேயே கணபதி பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து, அவர்களின் பேரன்பைபெற்றார். கல்லூரி எம்.ஏ. படிப்பை முடித்த பின்பு, உலகத்துக்கே கிரைண்டரை அறிமுகம் செய்த,தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையிலேயே கிரைண்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.
தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் கிரைண்டர் அனுப்பும் அரிய பணியை மிகுந்த ஆர்வமுடன் ஆர் காளியப்பன் செய்தார். 1987-ம் ஆண்டு வாழ்க்கைத் துணையாக பிரேமாவை ஏற்றுக் கொண்டார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி கொடுத்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிமுகம் செய்த அம்மா விலையில்லா கிரைண்டர் திட்டத்தில், தரமான கிரைண்டர்களை உற்பத்தி செய்த காளியப்பனின் கிரைண்டர் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகள் தமிழகம் முழுவதும், கிரைண்டர் சப்ளையில் ஈடுபட்டார்.
அகில உலக அளவில் சேவை சேவை செய்து வரும் அரிமா சங்க செயல்பாடுகள் ஆர் காளியப்பனின் கவனத்தை ஈர்த்ததால் 2010-ம் ஆண்டு நேரு நகர் அரிமா சங்கத்தில் தன்னை அர்ப்பணிப்பு உணர்வோடு இணைத்துக் கொண்டார். நேரு நகர் அரிமா சங்கத்தில் பொருளாளர், செயலாளர், தலைவர் என ஆர் காளியப்பனின் சேவையால் பதவிகளைப் பெற்று, அனைவருக்கும் உதவிகளை செய்தார். தொடர்ந்து 2019-2020-ம் வருடத்தில் அலையன்ஸ் மண்டல தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
20 அரிமா சங்கங்களை உள்ளடக்கிய இந்த மண்டல தலைவர் பதவியில் இருக்கும் போது, பன்னாட்டு அரிமா சங்க சாதனையை செய்து, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மண்டல மாநாடு 2020-ம் ஆண்டு காளப்பட்டி சாலையில் உள்ள கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் நுழைவு கட்டணம் வசூலிக்காமல், முழுவதும் இலவசமாக மண்டல மாநாட்டை வெற்றிகரமாக ஆர். காளியப்பன் நடத்தி பன்னாட்டு அரிமா சங்க நிர்வாகிகளின் அன்பையும், பாராட்டையும் பெற்றார். பண்டிகை காலங்களில், துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி- சேலைகளை தொடர்ந்து பல ஆண்டு காலமாக வழங்கி வருகிறார். காளப்பட்டி, நேரு நகர்,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில் திருப்பணிகளுக்கு அதிக நன்கொடை வழங்கி உள்ளார்.
கொரோனா கால கட்டத்தில், லட்சக்கணக் கானோருக்கு உணவு தயாரித்து, அதனை பல பகுதிகளுக்கு தொடர்ந்து இரண்டு மாதங்கள், சென்று விநியோகித்து பலரின் பசியாற்றியவர் காளியப்பன்.
அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணம் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி ஏற்பாடு செய்தவர் காளியப்பன்.
காளப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கியவர் காளியப்பன். 30 அலையன்ஸ் சங்கங்களை கொண்ட மாவட்ட ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர் காளியப்பன் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, கோவை பொள்ளாச்சி மடத்துக்குளம் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்களை நடும் திட்டம், அனாதை ஆசிரமங்களுக்கு தொடர்ந்து அன்னதானம், மக்கள் நலம் பேணும் மருத்துவ முகாம் ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்கின்ற உயர்ந்த லட்சியத்தை அடைவது இலக்கு என்றார் மாவட்ட ஆளுநர் ஆர்.காளியப்பன்.