சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி இன்று தீர்ப்பளித்துள்ளார். ஞானசேகரனுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஞானசேகரன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 11 பிரிவுகளுக்குமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அனைத்துச் சாட்டுகளும் உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார். மேலும், வழக்கு தொடங்கி ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் கோரிக்கை – கடுமையான வலியுறுத்தல்
தண்டனை அளிப்பதற்கான பரிசீலனையின் போது, ஞானசேகரன் நீதிபதியிடம் தனது வயதான தாய் இருப்பதாகவும், தண்டனை காரணமாக தனது தொழில் பாதிக்கப்படும் என்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கண்ணீருடன் வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் அரசுத் தரப்பில், ஞானசேகரனுக்கு கடுமையான (உச்சபட்ச) தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, 19 வயதுடைய இரண்டாம் ஆண்டு பெண் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர், அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன், டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவேண்டும் என கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவு கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார்.
Leave a Reply