தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை கோவையில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா பணிகள் உட்பட பல்வேறு அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அவிநாசி சாலை பழைய மேம்பாலம் ரவுண்டானா பகுதி, பில்லூர் மூன்றாம் குடிநீர் விநியோக பணிகள் மற்றும் கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்ட தொடர்பாக ராமகிருஷ்ணபுரம் பகுதி, கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு செய்தார். அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், பாதாள சாக்கடை, குடிநீர் பணிகளின் நிலை பற்றி தெரிவித்தார்.
மழைக்காலங்களில் கோவை அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்குவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. பொதுவாகவே கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு ரயில்வே பாலங்களின் கீழ் மழை நீர் தேங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், இதுபோன்ற சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, அதை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்ப் வசதிகள் உள்ளது, ஆனால் அதற்கு ஏற்ப நீர் தொட்டிகளை (SUMP) அமைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருக்கிறது. ரயில்வே துறை அதற்கு நிலம் கொடுத்தால் போதும் மழை நீர் முற்றிலுமாக தேங்காதபடி பார்த்துக் கொள்ளலாம். நிலம் தருவதாக சொல்லி இருக்கின்றனர் என்று பதில் அளித்தார். வருங்காலத்தில் மழைநீர் தேங்காதபடி இருக்க தேவையான திட்டங்களை தீட்டி அதை முதலமைச்சர் உடைய கவனத்திற்கு எடுத்து சென்று அவர் அனுமதி பெற்று பணிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மற்றும் சிவானந்தா காலனி வழியே உள்ள ரயில்வே சுரங்கத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க முன்னெடுக்கப்பட்ட பணிகள் இரண்டும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாகவும், இறுதியான சிறு பணிகள் மட்டும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் குறிப்பாக மழைக்காலத்தில் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் இருந்தால் அது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரை ஆய்வு செய்ய அறிவுறுத்துவதாக கூறினார்.
எங்கெல்லாம் குழிகள் தோண்டப்படுகிறதோ அங்கெல்லாம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பேரிக்கேடுகளை அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
கேரளாவில் உள்ள நமது 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் 45 அடி தான் நீர் தேக்க முடிகிறது. தேவையான நீர் தேக்குவதற்கான கோரிக்கையின் விவரம் குறித்து கேட்டதற்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கேரளா அரசோடு பேசி வருகிறார் எனவும் இதுகுறித்து முதலமைச்சர் பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டம் என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு, இன்னும் 1 ஆண்டில் 80 % பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.
கோவைக்கு தற்போது 370 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர் தினமும்) வழங்கப்படுகிறது. 2050ல் 400 முதல் 450 எம்.எல்.டி. குடிநீரை தருவதற்கான நீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பதிலளித்தார்.
Leave a Reply