சுற்றுலா பயணிகள் ஏற்படுத்தி டிராபிக் ஜாம்: டென்ஷனான காட்டு யானையால் பலியான அப்பாவி பெண்

Spread the love

 

மசினகுடி அருகே சுற்றுலா பயணிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தி யானையை படம் எடுத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் யானை கொந்தளித்து ஒரு பெண்ணை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்த சரசு (வயது 55) தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது கணவர் குமாருடன் பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் யானை ஒன்று திடீரென தோன்றியது.

 

அப்போது அந்த பகுதியிலிருந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டு வாகனங்களை நடுவே நிறுத்தி செல்போன்களில் புகைப்படம் எடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த யானை வாகனங்களை விரட்டியது. அந்த நேரத்தில் அந்தப்பாதையில் வந்த சரசுவின் ஸ்கூட்டரை யானை தாக்கியது.

 

சரசு படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக ஊட்டியின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அன்றிரவு உயிரிழந்தார். அவரது கணவர் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

இச்சம்பவம் தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததில், “மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் இயல்பாகவே நடமாடி வருகின்றன. அன்றும் பொக்காபுரம் சாலையில் யானை வந்தபோது சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுக்க நடுவே வாகனங்களை நிறுத்தினர். இதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானை கோபமடைந்து வாகனங்களை விரட்டியது. இந்த நிலையில் பயணித்த சரசுவின் ஸ்கூட்டரை தாக்கியது. யானை நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இவற்றைக் கண்டுகொள்ளாமல் செயல்படுவதால் தான் இத்தகைய துயரங்கள் நேர்கின்றன” என்று தெரிவித்தனர்.

 

வனப்பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.