, ,

சுய தொழிலில் ஈடுபட்டிருக்கும் தன்னம்பிக்கை திருநங்கைகள்

Spread the love

ஆடு, மாடு, கோழி, நாய்களுடன் உலாவும் இ​வர்கள், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள். 15 வருடத்திற்கு முன்பு இப்பகுதியில் கால் பதித்த இவர்கள், இன்று வாழ்வில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். சமுதாயத்தில் சக மனிதர்களிடம் அரவணைப்பு கிடைக்கவில்லை என்றாலும், திருநங்கைகள் பொதுவெளியில் புறக்கணிக்கப்பட்ட விதம், அவர்களுக்கு அளவிட முடியாத வலியை தந்திருக்கின்றது. வீடு வாடகைக்கு கிடைக்காமலும், கிடைக்கும் வீடுகளுக்கு கூடுதல் வாடகை தொகை வசூலிப்பதுமாக இவர்கள் வாழ்க்கை நகர்ந்தது. உளவியல் நெருக்கடியுடன் பொருளாதார நெருக்கடியும் இவர்களின் வாழ்க்கையை பாரத்துடன் நகர்த்தி இருக்கின்றது.

இந்த நிலையில் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போதுமான பொருள் ஈட்டல் இல்லாமல் தவித்த திருநங்கைகள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். அப்பொழுது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை அனுகிய திருநங்கை ரதி, தமிழ்நாடு சமூக நலத்துறை மூலமாக, சுயதொழில் செய்ய 20 ஆயிரம் ரூபாய் நிதி கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டார். அவர்களின் உதவியுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக 20 ஆயிரம் ரூபாய் தொகையை பெற்று, ஒரு கன்றுக்குட்டி இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கினார். ஆனால் தாங்களே தங்க இடம் இல்லாமல் தவிக்க, ஆடு மாடுகளுக்கு படும் அல்லல் அளப்பரியதாக அவர்களுக்கு இருந்தன. அப்போது ரதி ஒரு இடம் வாங்க முடிவெடுத்தார். முட்புதராக இருந்த 5 செண்ட் இடத்தை 20 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து வாங்கினார். தான் வைத்திருந்த நகையை வைத்து 10 லட்சம் ரூபாய் சேர்த்த ரதி, எஞ்சிய தொகைக்கு வங்கியில் கடன் பெற்று இந்த இடத்தை வாங்கினார்.

ரதி உட்பட அவருடன் பயணித்த அனைத்து திருநங்கைகளும் கவுண்டம்பாளையத்தில் நிரந்தரமாக குடியேறினார்கள். தான் வாங்கிய அந்த முதல் கன்று குட்டிக்கு இலட்சுமி என பெயரிட்டனர். கடந்த எழு ஆண்டுகளில் 1 கன்று குட்டி மற்றும் 2 ஆட்டு குட்டி இன்றி ஒரு பண்ணையாக மாறியிருக்கின்றது . புங்கனூர் குட்டை, பர்கூர் மலை மாடு, கொங்கு குட்டை, காங்கேயம் நாட்டு மாடுகள், ஹெச்.எஃப். மாடு, ஜெர்சி உள்ளிட்ட 15 மாடுகளும் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஜமுனாபாரி, அசாமி,  தலைச்சேரி, நாட்டு ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. டால்மேசன், ரேட்வில்லர், புள்ளி குட்டா, சிப்பிப்பாறை நாய்கள், நாட்டு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. மாடுகளை லட்சுமி உள்ளிட்ட பெயரிலும், தாடியுடன் உள்ள அசாமி ரக ஆட்டை பாய் என்று அழைப்பதும், ஆடு மாடுகளை திருநங்கைகள் தங்களின் குடும்பத்தினராக பாவிப்பதற்கான அடையாளம். கட்டாந்தரையில் கயிறின்றி அன்பால் கட்டிப்போட்ட ஆடு மாடுகள் திருநங்கைகள், அம்மா என்று அழைக்கும் ஆடு மாடுகள் அழைப்புக்கு அன்பை காணிக்கையாக்குகின்றனர் .
சமுதாயத்தில் மனிதர்களிடமிருந்து மிருக குணத்தை கண்டு மிரட்சியில் இருந்தவர்கள், ஆடு மாடு விலங்கிடமிருந்து பிறந்த மனிதத்தில் மீண்டனர். ஆடுகளை வளர்த்து விற்கும் திருநங்கைகள், மாடுகளை வளர்த்து பால் விற்று பொருளாதாரம் ஈட்டுகின்றனர் . சொந்தமாக முன்னேறி ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒய்யார நடை போடும் திருநங்கைகள், இன்று அக்கம் பக்கத்தினர் அரவணைப்பில் நெகிழ்கின்றனர். கோடிகளை எதிர்பார்க்கவில்லை எனும் இவர்கள் பொது சமுதாயத்தில் எதிர்பார்க்கும் ஒன்று, சமநிலை மற்றும் சம உரிமை, அன்பு மட்டுமே .