சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் சேர்ந்த பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலத்தில் வருவதால், இந்த நாள் ஆன்மிக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மிக சிறப்புடையதாகப் பார்க்கப்படுகிறது. “காலங்களில் நான் வசந்தமாக இருக்கிறேன்” என பகவத்கீதையில் பகவான் கண்ணன் உரைத்ததை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பௌர்ணமி நிலவின் ஒளியில் தெளிந்த நீர் நிலைகள் அழகிய சித்திரம் போன்று தெரியும் என்பதனால் சித்ரா பௌர்ணமி எனப் பெயரிடப்பட்டதாக ஒரு புராணக் கதை கூறுகிறது. மேலும், பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு சிவபெருமான் உயிர் வழங்கியதால் தோன்றியவரே சித்திர புத்திரன் என அழைக்கப்படும் சித்திர குப்தர் ஆவார். இவ்வாறு சித்திரத்திலிருந்து தோன்றியதால், சித்ரா பௌர்ணமி என்ற பெயருக்கு இந்த புராண நிகழ்வும் பின்னணி அளிக்கிறது.
சித்திர குப்தருக்குப் பாவ–புண்ணிய கணக்கெடுக்கும் கடமை வழங்கப்பட்டது. ‘சித்’ என்பது மனம், ‘குப்த’ என்பது மறைவு என்பதாலும், மனிதர்கள் மனதில் நினைத்து செய்யும் நல்வினை, தவவினைகளைக் கண்காணிக்க அவருக்கு அந்தப் பெயர் வந்தது. ஏமதர்மராஜரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் சூரிய பகவானின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதனால் நீலநிறம் உடைய நீனாதேவியுடன் அவர் திருமணம் செய்துகொண்டு பெற்ற புதல்வனே சித்ரகுப்தர். ஏடு, எழுத்தாணியுடன் தோன்றிய இவர், பின்பு காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு அஷ்டமா சித்திகளைப் பெற்றதற்குப் பின்னர், எமதர்மராஜரின் கணக்காளராக பணிபுரிகிறார்.
சூரியனும் சந்திரனும் முறையே சிவனும் சக்தியும் எனக் கொள்ளப்படுவதால், சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாடு சிறப்பாக அமைகிறது. குறிப்பாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள தர்மராஜர் கோயிலில் சித்திர குப்தருக்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பது, நீண்ட ஆயுளையும் தர்மநெறியில் வாழ்வதற்கும் ஆன்மீக இன்பத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள், புண்ணியங்களைப் பெருக்கி, பாவங்களை நீக்க இறைவனைச் சரணடைவதே இந்த ஆன்மீகத் திருநாளின் முக்கிய நோக்கமாகும்.
சித்திர குப்தர் அவதரித்த சித்ரா பௌர்ணமி

Leave a Reply