கோவை சிங்காநல்லூரில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீடு குறிப்புகளை இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையையும் தொடர்புடைய கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
முந்தைய மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கோவையில் உலகத் தரத்திலான சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உள்ள மொத்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமது வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், கோவையில் கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் வாய்ப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் உள்ள 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை தெற்கு தாசில்தார் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு கடிதம் எழுதி, நில மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தற்போது, கோவை கிரிக்கெட் அரங்கம் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு குறிப்புகளை ஆலோசகர்கள் இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply