,

சாய்பாபா காலனியில் மேம்பாலப் பணிகள் எப்போது தொடங்கப்படும் ?

saibaba colony
Spread the love

 ஆ.வெ.மாணிக்கவாசகம்

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும்,மேம்பாலப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் இருப்பது, கோவை மாநகர மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சாலை போக்குவரத்து  கட்டமைப்புக்கள் மிக மிக அவசியம் மற்றும் அத்தியாவசியமாகும்.
அதுவும் தற்போதைய வேகமாக,வளர்ச்சியடைந்த கால காலத்தில், நவீனமான சாலைகளை உருவாக்குவதும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவைகளில் முக்கிய ஒன்றாகும்.
இதனால் மிக விரைவாக பயணிக்க முடியும்.
கோவை மாவட்டத்தில் இயந்திர உற்பத்தி  தொழில்சாலை,
பின்னலாடை, வெட் கிரைண்டர் உற்பத்தி,  உள்ளிட்ட அனைத்து தொழில் வளர்ச்சி,ரயில்வே, விமானம் ,சாலை போக்குவரத்துக்கள் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 15-க்கும் மேம்பாலங்கள் கடந்த  10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முதல் மேம்பாலம்
கோவையில் அமைந்துள்ள முதல் மேம்பாலமான அவிநாசி சாலை மேம்பாலம் பெருந்தலைவர்  காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.  பின்பு
கலைஞர் மு. கருணாநிதியின்  ஆட்சியின் போது,1974-ம் ஆண்டில் அவிநாசி சாலை மேம்பாலம்  திறக்கப்பட்டது.
தமிழக தலைநகர் சென்னையில் கட்டப்பட்ட  அண்ணா மேம்பாலத்திற்கு பிறகு,
தமிழகத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் ஆகும்.
வட்ட வடிவிலான இந்த மேம்பாலம் இந்தியாவின் முதல் தர மேம்பாலமாக விளங்கி வருகிறது.
தற்போது கோவை மாவட்டத்தில் 15 -திற்கும் அதிகமான மேம்பாலங்களை அரசு கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
கோரிக்கை
கோவை மாநகரின் சாய்பாபா காலனி முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.
கே. கே .புதூர்,  அழகேசன் சாலை உள்ளிட்ட பகுதிகள்  மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் சங்கமிக்கும் இடமாகும்.
துடியலூர், மேட்டுப்பாளையம், ஊட்டி,மைசூர்  செல்லும் பயணிகள் இச்சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும் கல்லூரி, பள்ளிகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர் தினசரி மார்க்கெட்டுகள் இங்கு உள்ளது.
இவர்கள் அனைவரும் சாய்பாபா காலனி பகுதியை பயன்படுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி பொது மக்கள்,பொதுநல அமைப்புகள், சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சியினர்  உள்ளிட்டோர் சாய்பாபா காலனியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பணிகள் எப்போது
இதனை அடுத்து கடந்த  2022 -ம் ஆண்டு நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ரூ.71 கோடி மதிப்பீட்டில் 1.02 கிலோமீட்டர் தூரத்திற்கு மேட்டுப்பாளையம் சாலை கங்கா மருத்துவமனை முதல் சாய்பாபா கோயில் பேருந்து நிறுத்தம் வரை புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
ஆனால் அந்த அறிவிப்பினை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டே உள்ளது.
இதனால் கால விரையமும் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், சாய்பாபா காலனி மேம்பால பணிகள் தொடங்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேம்பால பணிகள் தொடங்கினாலும், அது கட்டி நிறைவடைவதற்கு 3 ஆண்டுகள் வரை ஆகும்.
அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் நிலை உள்ளது.
என்றாலும் மேட்டுப்பாளையம் சாலை ஏழு மீட்டர் அகலம் உள்ளதால், மேம்பாலம் கட்டும் போது பொது மக்களுக்கு அசௌரிகம் இருக்காது என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பால பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே கோவை மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உக்கடம் மேம்பாலப் பணிகள் தாமதம்
கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.ஆயிரத்து 454 கோடி மதிப்பீட்டில் உக்கடம் மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது இந்நிலையில் தமிழகத்தில் .
 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மேம்பால பணிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது மேம்பால பணிகள் 90 சதம் முடிந்த நிலையில், சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் டெக் ஸ்லாபுகள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் மேம்பால பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிற்சில வேலைகளால் இந்த ஆண்டு 2024 பிப்ரவரியில் முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரை உக்கட மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  எப்பொழுது வரும் என எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
அவிநாசி சாலை புதிய மேம்பாலம்
அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை 10. 01  கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 621.30 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பாலத்தில் அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பால பகுதியில் ஏறு தளம் இரு புறங்களிலும் 272 மீட்டர் நீளத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ், கிருஷ்ணம்மாள் கல்லூரி, பி. எஸ். ஜி .கல்லூரி, ஜி .ஆர் .ஜி. பள்ளி,கோவை மருத்துவ மையம் ஆகிய ஐந்து இடங்களில் சுரங்க நடைப்பாதைகள்  அமைக்கப்பட உள்ளன.
இது போன்ற பணிகள் அனைத்தும் முடிந்து வரும் டிசம்பர் மாதம் அவிநாசி சாலை புதிய மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற மேம்பாலங்களால் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்ப்பாக உள்ளது.