சர்க்கரைவள்ளி கிழங்கால் விநாயகர் சிலை வடிவமைத்த கோவை கலைஞர்

Spread the love

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் சர்க்கரைவள்ளி கிழங்கை பயன்படுத்தி தனித்துவமான விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.

வரும் புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஊர் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு அளவிலான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். முன்பெல்லாம் களிமண் சிலைகளே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது களிமண் தட்டுப்பாட்டால் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் சிலைகள் உருவாக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை முடிந்த பின் அந்த சிலைகள் நீரில் கரைக்கப்படும் போது, நீர் மாசடைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விதை விநாயகர் போன்ற புதிய முயற்சிகளும் சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த கலைஞர் UMT ராஜா, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சர்க்கரைவள்ளி கிழங்கினால் சிறிய அளவிலான வீட்டில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். “குளங்களை காப்போம், மரம் நடுவோம், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்துவதை தவிர்ப்போம்” என்ற கோஷத்தை மையமாகக் கொண்டு அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சர்க்கரைவள்ளி கிழங்கை கொண்டு செய்யப்பட்ட இந்த சிலை, வழிபாட்டுக்குப் பின் நீரில் கரைக்கப்படும் போது எந்தவித நீர் மாசும் ஏற்படுத்தாது. மாறாக, அது மீன்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக அமையும் என்பதால், சுற்றுச்சூழல் நட்பு முயற்சியாகும் என கலைஞர் தெரிவித்துள்ளார்.