, ,

சத்குரு ஜக்கிவாசுதேவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை

சத்குரு
Spread the love

ஈஷா யோக மையம் நிறுவன தலைவர் சத்குரு ஜக்கிவாசுதேவிற்கு மூளையில் மிக ஆபத்தான ரத்தக் கசிவு இருந்து வந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாகவும் ஈஷா மையம் தெரிவித்துள்ளது.

சத்குருவிற்கு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலி இருந்து வந்துள்ளதையடுத்து மார்ச் 14 ஆம் தேதி  அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் வினித் சூரியின் ஆலோசனைப்படி, சத்குருவிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது மூளையில் பெரிய அளவில் ரத்தக் கசிவு இருந்தது தெரிய வந்தது. 3 முதல் 4 வாரங்களுக்கு ரத்தக் கசிவு இருந்ததும், கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

அப்போது அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சத்குரு வீரியம் மிக்க வலி நிவாரணிகளின் உதவியுடன் அவர் ஏற்கனவே திட்டமிருந்த மார்ச் 15 ஆம் தேதியின் நிகழ்விலும், அடுத்த நாள் மார்ச் 16 ஆம் தேதி இந்தியா டுடேவின் கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்.

மார்ச் 17, 2024 அன்று அவரது நரம்பு மண்டலத்தின் நிலை மோசமானது. அவரது இடது கால் தனது பலத்தை இழந்ததுடன், தொடர் வாந்தி மற்றும் தலைவலியால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனையில் சேர்ந்த சத்குருவிற்கு CT ஸ்கேன் எடுக்கப்பட்டபோது, மூளையில் வீக்கம் அதிகமாகி, மூளையின் ஒரு பக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

சத்குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரது தலையில் இருந்த ரத்தக்கசிவை நீக்குவதற்காக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் வினித் சூரி, பிரனவ் குமார், சுதீர் தியாகி மற்றும் எஸ் சாட்டர்ஜி ஆகியோரின் மேலாண்மையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சத்குருவிற்கு வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் நீக்கப்பட்டிருக்கிறது.

சத்குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவரது மூளை, உடல், மற்றும் மற்ற முக்கியமான ரத்த அளவுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. எதிர்பார்த்ததை விட வேகமாகவே அவர் குணமடைந்து வருவதாகத் மருத்துவர் சூரி தெரிவித்துள்ளார்.