கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு பொருட்காட்சி வெகு விமர்சையாக தொடக்கம்

exhibition
Spread the love

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள ஆண்டு பொருட்காட்சி வியாழக்கிழமை விமர்சையாக தொடங்கியது. வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கோவை மேயர் ரங்கநாயகி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சியில் 1.68 லட்சம் பேர் கலந்துகொண்டதாகவும், அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டும் அதற்கும் மேற்பட்ட மக்கள் திரளாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

இந்த பொருட்காட்சியில், 31 தமிழ்நாடு அரசு துறைகள் தங்கள் துறைகளின் சேவைகள் மற்றும் மக்களுக்கான நலத் திட்டங்களை விளக்கும் அரங்குகளை அமைத்துள்ளன. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நலத் திட்டங்கள் எப்படி மக்களுக்கு பயனாகின்றன, அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய தகவல்களை இந்த அரங்குகள் அளிக்கின்றன.

மேலும், கோவை மாநகராட்சி செயல்படுத்தும் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்க, துறைசார் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, அரசின் முயற்சிகளை நேரில் காண வேண்டுமென அமைச்சர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்தார்.