கோவை உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தினம் தோறும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பயணியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலளித்ததால் அதிகாரிகள் அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபரின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
அவரிடம் இருந்து 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு 90 லட்சத்து 28 ஆயிரம் ஆகும். பிடிபட்ட அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply