கோவை மாநகரில் 712 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

Spread the love
ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், வழக்கம்போல் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. பொதுவாக, 3 முதல் 5 நாட்களுக்கு பிறகு, அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

சிலைகள் வைப்பதற்கான பணிகளை ஹிந்து அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம், காவல் ஆணையர் சரவணசுந்தர் தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த ஆண்டு, கோவை மாநகரில் 712 இடங்களில் பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில், 712 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட தகராறு, அடிதடி போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாநகர துணை காவல் ஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.