, ,

கோவை மாநகராட்சி பட்ஜெட் பணிகள் தீவிரம் கடந்த அறிவிப்பு செயல்பாடின்மை ஏமாற்றம்

பட்ஜெட்
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

1981-ம் ஆண்டில் கோவை நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக உருவெடுத்தது கோவை.
மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் வளம், பெருகி வரும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளால் 2011 ஆம் ஆண்டு பழைய மாநகராட்சி பகுதிகளுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மூன்று நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலூர், வெளளக்கிணர், சரவணம்பட்டி ,
சின்ன வேடம்பட்டி, கவுண்டம் பாளையம் ஆகிய ஏழு பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக பெரு மாநகராட்சியாக உயர்ந்தப்பட்டது.
தமிழகத்தின் சென்னைக்கு அடுத்து, இரண்டாவது மாநகராட்சி யாக கோவை விளங்கி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புதிய தொழில்கள், நகரின் கட்டமைப்புகள், தொழில் நுட்ப பூங்காக்கள் உள்ளிட்டவைகளால் கோவை மாநகரம் வளர்ந்து வரும் பெரும் மாநகரமாகவே உருவெடுத்து வருகிறது.
பட்ஜெட்
கோவை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாமன்ற கூட்டத்தில்தாக்கல் செய்யப்படும்.
மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கோவை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
பாராளுமன்றத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட உள்ளதால், வரும் மார்ச் முதல் வாரத்தில் கோவை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இதில் மாநகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய நிலை, மத்திய – மாநில அரசுகள் கோவை மாநகராட்சிக்கு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் .
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 240 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள்,243 கிலோமீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலைகள், ஆயிரத்து 668 கிலோ மீட்டர் கற் சாலைகள்,114 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலைகள் உள்ளன. ஆலோசனை2024-2025 ம் ஆண்டுக்கான கோவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநகராட்சி யில் உள்ள நகரமைப்பு, பொது சுகாதாரம், கல்வித்துறை, வருவாய்த் துறை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய அறிவிப்புகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளின் நிலைகள் குறித்து கலந்து ஆலோசனை நடத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை 3 ஆயிரத்து 29 கோடியே 7 லட்ச ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது.இதில் வருவாய் பற்றாக்குறையாக ரூ. 10 கோடி இருந்தது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதி நிலை அறிக்கையில், கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமைய வேண்டும் என தொழிலதிபர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
பொதுமக்கள்இந்நிலையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புக்களில் முக்கியமானவை இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப் படுகிறது.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 408.77 கிலோ மீட்டர் பழுதடைந்த சாலைகள், ரூபாய் 215 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதில் 200 கிலோமீட்டர் மட்டுமே செப்பனிடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
மேலும் இந்த மதிப்பீட்டு தொகையும் 3 தவணைகளாக அரசிடம் இருந்து வந்தது எனவும்,இன்னும் நூறு கோடி ரூபாய் அரசிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
வார்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு, வார்டு உறுப்பினர் வளர்ச்சி மேம்பாட்டு திட்ட நிதியாக ரூ. 50 லட்சம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு செயல்படுத்தப் பட்டு, மாநகர் முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் உக்கடம் குளத்தில் மிதவை சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலேயே கோவை மாநகராட்சியில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படும் என அறிவிக்கப் பட்டது. அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், திட்டத்தினை செயல்படுத்த முனைப்பு காட்டினார். ஆனால் இது ஆரம்ப கட்ட பணிகளோடு முடங்கி உள்ளது. கமிஷனர் பிரதாப்பும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பினை கருதி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமும் குடிநீர் கிடைக்க வெளியிடப்பட்ட அறிவிப்பினை உடனே நிறைவேற்ற பெற்றோர்கள் தரப்பில் எதிர்பார்க்கப் படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளின் தரத்தினை உயர்த்த ரூ.25 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பில், கோவையின் மையப் பகுதியில் உள்ள பள்ளிகளில் மட்டுமே கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன என பொதுமக்கள் கூறுகின்றனர்.
பில்லூர்
ரூ.779 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் உருவான பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்ட அறிவிப்பு அமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதை, விரைந்து முடிக்கப்பட்ட இக் கூட்டு குடிநீர் திட்டத்தை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டபோது, இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டு அறிவித்த திட்டங்களை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியான அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வளர்ந்து வரும் கோவை மாநகரத்திற்கு தேவைக்கு ஏற்ப, கோவை மாநகராட்சி நிர்வாகமும் தமது பணிகளில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.