கோவை தானீஸ் அகமது கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா வால்மார்ட் இந்தியா நிர்வாகி பங்கேற்பு

Spread the love

கோ வை அருகே கேஜி சாவடியில் உள்ள தானிஸ் அகமது தொழில்நுட்ப கல்லூரியின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (17-11-24, ஞாயிற்றுக்கிழமை) காலை 11மணி அளவில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி இயக்குனர் அக்பர் பாஷா தலைமை தாங்கினார். கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பார்த்திபன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வால்மார்ட் குளோபல் டெக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி விக்னேஷ் பரமசிவம் கலந்து கொண்டு 82மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் அவர் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்க பதக்கம் வென்ற மாணவி சகாமாபீட்டி,

மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில்,
இந்தியாவில் உள்ள 150கோடி மக்களில் 4கோடி பேர்தான் உயர்கல்விக்குள் நுழைகிறார்கள். தமிழக பெற்றோர்கள் தங்கள் வீடுகள், விவசாய நிலங்களை அடமானம் வைத்தாவது தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து ஏதாவது ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர். மாணவர்கள் தங்களின் இலக்கை நிர்ணயம் செய்து அதை நோக்கி தங்கள் பயணத்தை தொடர வேண்டும்.
மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதன்படியே அவர்கள் வாழ்க்கை அமையும். பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. வேலையில் நல்ல வேலை, மோசமான வேலை என்று எதுவும் இல்லை. நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் அதில் நம்பர் ஒன்னாக இருங்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.