கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அக்டோபரில் திறப்பு

goldwins flyover
Spread the love
கோவை மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து நரம்பாக விளங்கும் அவிநாசி சாலையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வருகிற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1,790 கோடி மதிப்பில் 10.10 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், தென்னிந்தியாவின் நீளமான மேம்பாலமாகும். சுமார் 17.5 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலைகளுடன், அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறும், இறங்கும் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 98% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள சிறிய பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் சோதனை முடிக்கப்பட்டு, அக்டோபர் முதல் வாரத்தில் பாலம் திறக்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பின்னர், மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்கும் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும்,” என்றனர்.

கோவையின் தொழில், கல்வி, மருத்துவம், ஐ.டி. துறைகளின் வளர்ச்சிக்கு அவிநாசி சாலை முக்கிய பங்காற்றி வரும் நிலையில், இந்த மேம்பாலம் திறக்கப்படுவது நகரின் உள்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.