கோவையில் ஹவாலா பணம் கடத்தல்: 26.4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் – இருவர் கைது

Spread the love

கோவை மாவட்டம் க.க.சாவடி பகுதியில் இன்று காலை நடந்த போலீஸ் வாகன தணிக்கையின் போது, ஹவாலா வழியில் கடத்தப்பட்ட 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் நடைபெற்றது.

மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கோவையிலிருந்து கேரளாவை நோக்கி சென்ற இருவரை சோதனையிட்ட போது, அவர்கள் எந்தவித சட்டப்பூர்வ ஆவணங்களும் இல்லாமல் பெரிய தொகை பணத்துடன் பயணம் செய்தது தெரியவந்தது.

பணத்தை கடத்தி வந்தவர்களாக, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என்பவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், அவர்கள் வழங்கிய தகவல்கள் முரணாக இருந்ததால், இருவரும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஹவாலா முறையில் பணம் கடத்தும் செயற்பாடுகள் மீதான போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.