கோவையில் மோசமான வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தல் – அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

Spread the love

கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காணொளி காட்சி மூலமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

“கோவை மற்றும் மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மட்டும் அதிக மழை பதிவாகி இருப்பது உண்மை. ஆனாலும், மழையால் மக்கள் மீது பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஐந்து இடங்களில் சிறு வீடுகள் சேதமடைந்துள்ளன. சம்பவ இடங்களுக்கு உடனடியாக சென்ற அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்,” என்றார் அமைச்சர்.

இருவருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவசரநிலை நடவடிக்கைகளுக்காக 16 ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார். மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட மூன்று முக்கிய பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், தற்போது சில இடங்களில் மருத்துவ முகாம்கள் செயல்படுகின்றன, உணவு மற்றும் தங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

“மழை நேரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கடந்த முறை பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் இன்று காலையில் இந்த ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்துள்ளார். வால்பாறையில் உள்ள மீட்பு குழுவினர் தற்போது போதுமான அளவில் உள்ளனர்; தேவையானால் கூடுதல் குழுவினர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

மேலும், சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாத பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது என்றும், மாற்று பாதைகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாறைகள் போன்ற அபாயகரமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், மோசமான நிலையில் உள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஒரே நேரத்தில் அதிக மழை பெய்வது போன்ற சூழ்நிலையில் சில பிரச்சனைகள் உருவாகலாம். எனவே, மழை நீர் தேங்காமல் செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாசில்தார்கள் நேரில் சென்று நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்,” என்றார் அவர்.