கோவையில் முதல்முறையாக நடைபெற உள்ள தனித்துவமான கருத்தரங்கு!

Spread the love

லேர்னிங் சொசைட்டிஸ் அன்-கான்பிரான்ஸ் 2025 எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கு பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை குமரகுரு சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. இதில், இந்த கருத்தரங்கை முன்னெடுத்துள்ள ஷிக்ஷண்டார் அன்டோலன் இயக்கத்தின் நிறுவனர் மணீஷ் ஜெயின், குமரகுரு பொறியியல் கல்லூரியின் உதவி துணை தலைவர் சரவணன் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ‘அன்- கான்பிரான்ஸ்’ எனும் தனித்துவம் கொண்ட நிகழ்வு தற்போது கோவையில் நடைபெற உள்ளதாகவும் வழக்கமான கருத்தரங்குகள் போல இல்லாமல் இந்த ‘அன்- கான்பிரான்ஸ் நிகழ்வில் பங்கேற்பாளர்களே பேச்சாளர்களாகவும், பயிலரங்கங்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் நிபுணர்களாகவும் செயல்படுவார்கள்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாற்று கல்வி நிபுணர்கள் உள்பட கல்வி கற்றல் துறையில் மாற்று சிந்தனை கொண்டவர்கள், கலைஞர்கள், இயற்கை விவசாயிகள், சமுதாயம் சார்ந்த தொழில்முனைவோர், சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தினமும் 50 அமர்வுகள் இடம்பெறும் என்றும் நாள் ஒன்றுக்கு 150 பயிலரங்கங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அவர்கள் பங்கேற்று, அவர்களின் படைப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.