கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தலில் அதிகமான சீட்டுகள் கேட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பியதற்கு அது நாளை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்ட பின் தெரிந்து கொள்வீர்கள் என பதில் அளித்தார்.
ஆங்கில மொழி குறித்து அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அவரது உளறல்களுக்கு எல்லையே இல்லை என்றும் ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம் அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறியதாகவும் அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்கள்வையிலேயே அவர் பேசியதாகவும் தெரிவித்தார். திராவிட இயக்கம் இந்த தீர்மானத்தை முன்வைப்பதாகவும் அதனை மதிமுகவும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். அதே சமயம் பாஜகவிற்கு இதில் விருப்பமும் இல்லை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருப்பதாகவும் அதில் தோற்றுப் போவார்கள் என்றும் தெரிவித்தார்.
பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் இந்தியா என்று அழைக்கக்கூடாது பாரத் என்று தான் அழைக்க வேண்டும் தலைநகர் டெல்லிக்கு பதில் வாரணாசியை மாற்ற வேண்டும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது இந்தியும் சமஸ்கிருதம் மட்டும்தான் இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்று பிரகடனம் வெளியிட்டதாகவும் இந்தப் பின்னணியில் தான் இந்த சக்திகள் இயங்கிக் கொண்டிருப்பதாக சாடினார். பல மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். இந்தி எதிர்ப்பில் ஈடுபடாத மாநிலங்களான கர்நாடகா மராட்டியம் பஞ்சாப் மேற்குவங்கம் ஆகியவை தற்போது இந்தி வேண்டாம் என்று தீர்மானம் போடுவதாக தெரிவித்தார். இவர்கள் திணிக்க நினைக்கும் பொழுது அதற்கான எதிர்ப்புகள் வலுத்து வருவதாகவும் சாடினார்.
ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று பாஜகவினர் சிலர் கூறி வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அவர்கள் கூறுவதற்கெல்லாம் நாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியுமா ஒன்றியம் என்றால் யூனியன் அதனால்தான் ஒன்றியம் என்று கூறுவதாக தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார்.
கிமு 700ல் இருந்து கிபி 500 வரை எடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கு நிகராக இருக்கின்றன என்றும் இரும்பு உலோகம் அன்றைய நாட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது அதேபோன்று வரிசையான வீடுகள் சாக்கடை போவதற்கான கால்வாய்கள் போன்றதற்கான ஆதாரங்களை ராமகிருஷ்ணா முதலிலேயே வெளியிட்டதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய மத்திய அரசு வேண்டுமென்று இன்னும் துல்லியமாக ஆராய வேண்டும் என்று கூறி குழப்பி வருவதாக தெரிவித்தார். கீழடி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகம் என்று குறிப்பிட்ட அவர் இவர்கள் ஆரிய நாகரிகத்தை ஆரிய கலாச்சாரத்தை இங்கு திணிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகமாக வாழ்ந்தார்கள் என்ற சான்றுகள் கிடைப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். மேலும் அது அவர்களுக்கு எதிராக போய்விடும் என்பதனால் பாஜக கூட்டம் இன்னும் வலுவான ஆதரவுகள் வேண்டும் என்று தெரிவித்து வருவதாக கூறினார்.
வருமானவரித்துறை அமலாக்கத்துறை மத்திய உளவுத்துறை ஆகியவற்றை இந்துத்துவாவை திணிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாகவும், அதன் காரணமாகத்தான் அவர்கள் மீது எதிர்ப்புகள் வலுப்பதாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிஆர்பி ராஜா கேலிச்சித்திரம் வரைந்ததாக எழுந்து வரும் புகார்கள் குறித்தான கேள்விக்கும் வெளியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்தான கேள்விக்கும் பதில் அளித்த வைகோ, வெளியில் நடமாட முடியாது என்று கூறுகின்ற அளவிற்கு வலிமையோ உரமோ இல்லாத கூட்டம் அவர்கள் என்றும் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு பொருத்தமற்ற முறையில் கற்பனையாக சிலவற்றை பேசி வரும் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி உதயகுமாருக்கு முன்பே நயினார் நாகேந்திரன் இதனை கூறியிருந்ததாக தெரிவித்தார். பாஜக உள்ளேயே பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாமக கட்சி விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பாமக ஒரு வலுவான கட்சி என்றும் தற்போது அங்கு நிலவி வருவது உட்கட்சி பிரச்சனை என்றும் கூறிய அவர் அதைப்பற்றி எந்த கருத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் பாஜக யார் யாரையெல்லாம் அழைக்க முடியும் என்று நினைப்பதாகவும் அது போன்று நேரில் சென்று பேசுவதாகவும் தெரிவித்த அவர் ராமதாஸும் அன்புமணியும் அவரவர் கருத்துக்களை கூறி விட்டார்கள் தற்பொழுது தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் இரண்டு அணி போன்று தெரிகிறது காலப்போக்கில் அதனை எல்லாம் மாற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
Leave a Reply