கோவை மாநகரில் தொடர்ந்து நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் நோக்கில், காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரண்டு நபர்கள் கருப்பு மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து, திருடிய இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு செய்துள்ளதாக தெரியவந்தது.
தொடர்ந்த விசாரணையில், குற்றவாளிகள் உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஷபில் (19) மற்றும் ஷம்சீர் (18) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். காவல்துறையினர் இவர்களை தேடி வந்த நிலையில், சரவணம்பட்டி சத்தி சாலை, கீரணத்தம் பகுதியில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்று விபத்துக்குள்ளாகி கால் எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஷபில் மற்றும் ஷம்சீரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களது ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னணியில், போலீசாரை திசைதிருப்ப ரயில்வே டிராக் வழியாக தப்பிச் செல்லும் நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, பெண்களிடம் இருந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறித்த தங்கச் செயின்களின் ஒரு பகுதியை விற்று, பணமாக்கி உல்லாச வாழ்க்கை நடத்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்கச் செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களது தொடர்புகளைப் பற்றியும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply